Thursday, August 25, 2011

நேற்று முளைத்த காளானும்... பழைய பூதங்களும் ...

                 அன்னா ஹாசரே மெற்கொள்ளும் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்க்கு இவ்வளவு ஆதரவை கண்டு உண்மையில் இது இந்தியாதானா எனும் அளவுக்கு ஆச்சர்யம் எழுகின்றது , நாம் சாரசரி வாழ்க்கையில் ஊழல் இல்லாத இடமே இல்லை... பழகிப்போன, கறைபடிந்த, அர்த்தமில்லாத,தேசத்தின் துரோகமான‌ ஊழலை எதிர்ப்பது என்பது சாதாரன விசயமில்லை,அதற்கு பெருகி வரும் ஆதரவுகள் நிச்சயம் பாராட்டக்கூடிய விசயம்தாம்.

                  எல்லாம் சரிதான் இவ்வளவு நாளாய் எங்கே போனாய் என் தேசமே? வேறு எவறுமே போராடவில்லையா? இல்லை போராடியவர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? போராடியவர்களை இந்த ஊடகம் சரியாக உங்களுக்கு அடையாளபடுத்த வில்லையா? இல்லை எல்லோரும் ஆதரவு தருகிறார்கள் நாமும் கலந்து கொள்வோம் என்று சொல்கிறீர்களா? இல்லை மட்டைபந்தில் சொதப்பிய இந்திய அணியை பார்த்த வெறுப்பில் வந்த கூட்டமா, நாளைக்கே இந்தியாவை கடனாளியாக்கி விட்டு இரண்டொரு வெற்றிகளை குவித்து விட்டால் தொலைக்காட்சி முன் அமர்ந்து தவமிருக்க‌ போய்விடுவீர்களா?.
 

        தனியார் முதலாளிகளின் ஊழலுக்கும்,அரசு ஊழியர்களின் ஊழலுக்கும் எதிராய் கிளர்தெழுந்தவர்களை நக்சல்கள் என்று கூறி அடக்குகிறோம்.அவர்களின் போராட்ட பாதை தவறு என ஏற்றுக்கொள்ளும் அதே தருணத்தில், அவர்களின் போராட்ட காரணத்திற்கு என்ன பதில் சொன்னோம். இயற்கை வளங்களை அபகரிக்கும் தனியார் முதலாளிகளை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் ஊழலுக்கு ஆதரவு தரும் அரசையும் நம்மையும் என்னவென்று சொல்வது(இதைதானே அருந்ததி ராயும் வழியுறுத்தி சொல்கிறார்).இதைப்போன்ற பழைய பூதங்களை நம் கண் முன் மறைக்கப்பட்டது ஏன்?.அவற்றை பற்றி அறிந்து கொள்ள கூட முற்படாத‌ நாம் நேற்று கிளம்பிய ஊழல் போராட்டதிற்கு ஆதரவு தருகிறேன் என்று கிளம்புவதும், இதை வைத்து ஆதாயம் தேட விளையும் புல்லுருவிகளை பாராட்டுவதையும் நினைத்தால் நகைச்சுவைதான் வருகின்றது.

        இவ்வளவு ஏன்? அன்னா ஹசாரே போராட்டம் நடத்தும் இதே நேரத்தில் இன்னொரு முக்கிய போராட்டமும் நடைபெறுகின்றது அதுவும் பாராளுமன்ற வாசலிலேயே நடக்கிறது, அதுவும் நம் வாழ்க்கை சம்பந்தபட்ட ஒன்றுதான் எத்தனை பேருக்கு அந்த போராட்டம் தெரியும்? எத்தனை பேர் அதற்கு ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்? அதுவும் இன்றியமையாத உணவு பொருள் மரபனு கலப்பினத்திற்கு எதிராக‌ பசுமைபுரட்சி(கிரீன்பீஸ்) அமைப்பினர் செய்யும் ஆர்பாட்டம். இந்த "இந்திய உயிரி‍தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்" மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதை அனுமதித்தால், வளரும் சந்ததிக்கு நம் கையினாலேயெ பூச்சிக்கொள்ளியை உணவு என்னும் பெயரில் கொடுக்க நேரிடலாம், மேலும் மரபனு பற்றி தவறாக மக்களிடத்தில் சொன்னாலே சிறை தண்டனையாம். என்ன ஒரு கொடுமை , தனியார் மயவாதிகளும் ,அரசியல் வாதிகளும் இணைந்து செயல்படுத்த போகும் இப்படி பட்ட‌ ஒரு மசோதாவும்தான் இருக்கிறது.இதை பற்றி என்ன சொல்ல போகிறோம்? இதற்கு ஏன் மக்கள் யாரும் திரளவில்லை?


            ஊழல் எதிர்ப்பு முறையாக அமல்படுத்தப்பட்டு நல்ல காரியங்கள் நடக்கும் என்றால் அது நல்லது.இந்த போராட்டம் "லொக்பால்" வரம்புக்குள் பிரதமரும் வரவேண்டும் என்றும் உடனே அமல்படுத்த வேண்டும் என்று தொடர்கிறது.அப்படி நடைமுறைபடுத்திய பின் எல்லாம் சரியாக நடக்குமா? அதற்கு என்ன உத்திரவாதம் தரமுடியும்.இதை ஆதரிக்கும் எதிர்கட்சிகளும் நாளை ஆட்சிக்கு வந்தால் மாறக்கூடும்,இன்னும் சொல்லப் போனால் எதிர்கட்சிகளின் அரசியலுக்கு அன்னா பலியகிறாரோ என்ற எண்ணம் கூட வருகின்றது.இன்று ஊழலுக்கு எதிராக கொடி பிடிக்கும் நாம் சாதீயம் குறித்தோ, ஏழ்மை நிலைக்கு எதிராகவோ போராடும் போது அவரவர் வேலை பார்த்து கொண்டுதானே செல்கிறோம்.சுதந்திரம் வாங்கியதில் இருந்து துயரப்படும் அடித்தட்டு மக்களுக்கு எவரும் போராட முன் வருவதில்லையே அல்லது அப்படி வருவோரை மட்டம் தட்டுவதிலேதானே நாம் காலத்தை கழித்திருக்கிறோம். இது குறித்து எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? இல்லை சிலர் போல் "அதற்கெல்லாம் போராட ஆள் இருக்கிறார்கள்" என்று சொல்ல வருகிறோமா? இல்லை "நான் செய்யலாம் என்று இருந்தேன் அவர்கள் செய்கிறார்கள்,நான் எப்படி அவர்களுக்கு ஆதரவு தரமுடியும்" என்று சொல்ல வருகிறோமா? (இப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்று ஊழல் எதிப்பு போருக்கு ஆதரவு தருகிறார்களாம்!?). இவையெல்லாம் மாறி என்று நாம் ஒரே சிந்தனையில் உருப்பெற போகிறோம்? தமிழர்கள் நாம் ஒன்றினைந்து நினைத்திருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏன் உலகையும் கூட இலங்கை விசயத்தை புரிதல் செய்திருக்க முடியும் ஆனால் நம் போராட்ட களங்களை தனியாக பிரித்து, நமக்குள் தனிதனியாய் பிரிந்து நம் சொந்தங்களை இழந்து பழி சொல்லுக்கு இன்று ஆளாகி இருக்கிறோம். இவையெல்லாம் நம் கண்ணில் தெரியாமல் மறைத்த‌ புண்ணியத்தை யார் செய்தது? அப்போதெல்லாம் எங்கே போயிருந்தது இத்தனை பெரும் இந்தியா?  
    
                                           ஊழல் விசயத்தில் நான் கொடுக்கமாட்டேன், வாங்கமாட்டேன் என்ற இரண்டு விதிகள்தான் ஆனால் சராசரி பதில் என்ன வரும்?, "நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் ஆகாது".இந்த பதில் எல்லாம் அர்த்தமில்லாத ஒன்று,சாத்தியம் என்று வருகிறதோ அன்று சிறிய அளவிலும் சரி,பெரிய அளவிலும் சரி ஊழல் இருக்காது.இதே அரசு "லோக்பால்" மசோதா நிறைவேற்றினாலும் ஊழலை மறைக்க முடியாது காரணம் மனிதர்களிடம் பணம் சேர்க்கும் ஆசையும்,வெறியும் புரையோடிபோய் கிடக்கின்றது.நேர்வழியில் சம்பாதிக்க எவரும் விரும்பாத நிலை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.நாம் அரசியல்வாதிகளையும்,அரசு அலுவலர்களையும்,தனியார் முதலாளிகளையும் குறைசொல்லி ஒன்றும் பயனில்லை, நாமும் மாறவேண்டும் அதுதான் ஊழலை ஒழிக்க நிரந்தர வழி.ஒவ்வொரு மனிதனும் மனிதனாய்,இந்தியனாய் நினைத்தால் அது முடியும். போராட்டம் என்பது மனித‌ சக்தியை திரட்டும் பெரும் யுக்தி, யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக உங்களை இணைத்துக் கொள்ளாமல் சுயமாக சிந்தனை செய்து போராடுங்கள்.நேர்மையான நல்ல காரியங்கள் நடக்கவேண்டும் என்பதற்காய் போராடுங்கள். மனிதன் மனிதனாய் வாழ்வதற்கு போராடுங்கள்.

        இந்தியா நிறைய இடங்களில் முன்னேற வேண்டியதிருக்கிறது சாதீயம்,மதம்,ஏழ்மை,தீவிரவாதம்,ஊழல் மற்றும் இன்னும் பற்பல.இவை எல்லாம் முற்றிலும் மாற வேண்டுமானால் மனிதர்கள் நாம் மாறவேண்டும் அதுதான் இந்தியா ஒளிர்வதற்க்கு விளக்காகுமே தவிற இது போன்று ஒருவர் பின்னே ஓடிவரும் செம்மறி ஆடுகளாய் இருப்பது நமக்கு அவசியமே இல்லாத ஒன்று.எதற்காக போராடுகிறோம் என்று அறிந்து பின்தொடர்வோம், போராடுவோம். ஒவ்வொரு இந்தியனும் நினைத்தால் சாதீயம், மதம்,ஏழ்மை, தீவிரவாதம், ஊழல் எதுவுமே இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.ஆம் நாம் நினைத்தால்தான் அது முடியும்.
       

Monday, August 8, 2011

காதல் பக்கம் ‍ - 1






Wednesday, July 27, 2011

காத்திருக்கும் தீர்ப்பு....!

காத்திருக்கும் தீர்ப்பு...                

              தமிழகத்தின் ஒவ்வொரு தமிழனும் வாதிடும் சூடான சமாச்சாரம் சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வியைப் பற்றி பல்வேறு தரப்பினர் சார்பாகவும்,எதிராகவும் அலசி ஆராய்ந்த பிறகு அதனை பற்றி எழுதி கட்டுரையின் பாதையை மாற்ற விரும்பவில்லை, ஆனால் தமிழகத்தில் இன்றைய நிலையில் பாதிக்கப்படும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன அவற்றை பற்றி விளக்குவதே கட்டுரையின் நோக்கம்.

 
1. சமச்சீர் கல்வி:
               இன்றைய சமச்சீர் கல்வி விசாரணையில் உச்சநீதி மன்ற நீதிபதி கேட்ட கேள்வி:
 "எப்போது சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்? காலக்கெடு ஏதாவது உள்ளதா? " 

தமிழக அரசு நீதிபதியின் பதில்:

"2012-ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முயற்சி செய்யப்படும்"

                     ஆக 2012 லும் முயற்ச்சி செய்யப்படும் உறுதி கிடையாது. இவ்வளவு முட்டுக்கட்டை சமச்சீர் கல்விக்கு ஏன்? ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் இந்த விசயத்தில்.

எங்களுக்கு சில கேள்விகள் மனதில் எழுகின்றன.

* நீதிமன்றங்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஆணையிடுகின்றனவே அவை எதையும் ஆராயாமலா சொல்கிறார்கள்?. நீதிமன்றம் மாறுதல் செய்து கொள்ளலாம் என்று சொன்ன பிறகும் சரியில்லை... சரியில்லை... என்று பிடிவாதம் பிடிக்கும் நோக்கம் என்ன?

* இத்தனை பேர் சேர்ந்து(இந்திய தொழில் நுட்ப கழக பேராசிரியர்கள் உட்பட) உருவாக்கிய பாட திட்டம் தவறு என்றால் நீங்கள் உருவாக்கும் குழு மட்டும் எப்படி அறிவாளிகளாக இருந்து விட முடியும்?

* ஒரு புத்தகம் முழுக்க ஒரு சார்பாக இருக்க முடியாது , சார்பான பக்கங்களை ம‌ட்டும் வெட்டி எடுத்து விடுவதில் என்ன சிரமம் இருக்க போகிறது?

* நீங்கள் உருவாக்கும் குழு உங்கள் துதி பாடி சமச்சீர் புத்தகத்தை மாற்றவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? இல்லை தனியார் பள்ளிகளை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?(நீங்கள் உருவாகிய சமச்சீர் கல்வி ஆய்வு குழுவை ஆராயும் போது மேற்குறிப்பிட்ட இரண்டும் உண்மை போல்தான் தோன்றும்)

* இன்றைய நிலையில் மாணவர்களை இப்படி வதைப்பது தகுமா? இவர்கள்தான் அடுத்த தேர்தலில் ஓட்டு போடும் நிலைக்கு வருபவர்கள் அன்று இவற்றை நினைத்து பார்க்க மாட்டார்களா?.

* கடைசியாக எப்பொழுதுதான் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவீர்கள்? . சமச்சீர் கல்வி வருமா? வராதா?

2. விலைவாசி உயர்வு:  



               கடந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு தலை விரித்தாடியது என்றுதான் ஆட்சி மாற்றம் விரும்பினோம்.அதன் படியே ஆட்சி மாறியது விலைவாசி குறைந்ததா? இல்லையே...
 
          மத்திய அரசு வாகன எரி பொருட்களுக்கு விலை உயர்த்தியபோது தமிழக அரசு வரியை குறைத்து மக்கள் மனதில் கொஞ்சம் சந்தோசத்தை தந்தீர்கள்,ஆனால் அடுத்த இரண்டு வாரங்களிலேயே அனைத்திலும் வரியை உயர்த்தி சாபத்தை வாங்கி கொண்டீர்களே இது என்ன சாமர்த்தியம்?

                  மத்திய அரசு விலை உயர்த்திய போது கூப்பாடு போடும் நீங்கள், இங்கு வரிகளை உயர்த்தி கொள்வது எந்த விதத்தில் நியாயம் ? இதற்க்கு மட்டும் எப்படி மற்ற மாநிலங்களை காரணம் சொல்கிறீர்கள்.அடித்தட்டு மக்கள் அன்றாடம் படும் அவலம் உங்களுக்கு தெரிய வில்லையா?விலை ஏற்றுவதற்க்குத்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தினோமா?.கடந்த ஆட்சியில் 1 ரூபாய்க்கு அரிசி தந்து மற்றவை விலை அதிகமாயிருந்தது , இப்பொழுது இலவசமாக அரிசி தந்திருக்கிறீர்கள் மற்றவை அப்படியேதான் இருக்கிறது அல்லது அதிகரித்திருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்.என்ன மாற்றம் கொண்டு வந்திருக்கிறீர்கள்,3 மாதத்திற்குள் எப்படி முடியும் என்று கேட்பவர்களுக்கு... 3 மாதத்திற்க்குள் பழைய அரசின் திட்டங்களை இவ்வளவு எதிர்க்க முனைந்த நேரங்களை இதில் கொஞ்சம் செலவிட்டிருக்கலாமே...

3. மின்சார பிரச்சனை:



சமீபத்தில் என் அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி:

 தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை  

2007 - 86
2008 - 75
2009  - 15
2010 - 5
2011 - ௦௦௦௦௦0

  - ‍‍கொய்யால மின்சாரம் இருந்தாதானடா சாவீங்க... 
                                 இது நகைச்சுவைக்காக அனுப்படிருந்தாலும் அதில் உள்ள செய்தியை நம்மால் மறுக்க இயலாது.சமீபகாலமாக எப்பொழுது மின்சாரம் போகிறது எப்பொழுது மின்சாரம் வருகிறது என்றே தெரியவில்லை.கடந்த ஆட்சியிலாவது அறிவித்து விட்டு மிசாரத்தை தடை செய்வார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் எப்பொழுது மின்சாரம் தடைசெய்வார்கள் எவ்வளவு நேரம் மின்சாரம் போகும் என்பதே தெரியவில்லை.(தூக்கம் கெட்டு கண்விழித்த போது யோசித்தவைதான் இவையெல்லாம்). மின்சார உற்பத்திக்காக சில நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதை பாராட்டலாம் அனால் அவர்கள் செய்த அதே தவற்றை செய்வதன் மூலம் வெறுப்பை சம்பாதிக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 


4. பேருந்து கட்டணம் மற்றும் அரசு மதுபான வியாபாரம்:





                  போன ஆட்சியில் கலர் கலராய் பேருந்து இயக்கி மக்களை வாட்டி வதைக்கிறார்கள் என்று கூறித்தான் ஓட்டு கேட்டு வந்தீர்கள்.நீங்கள் அதையே பின்பற்றுவது என்ன நியாயம் ? மக்கள் எப்படி போனாலும் பரவயில்லை வருமானம் வந்தால் போதுமா?.போன ஆட்சியில் காது கிழிய கத்திய கூட்டனி கட்சிகள் எங்கே? என்ன செய்கிறார்கள் எதிர்கட்சியினர்?.சொகுசு பேருந்து என்ற பெயரில் ஏன் இவ்வளவு கட்டணகொள்ளை. சாதரன பேருந்துகளுக்கும் சொகுசு பேருந்துகளுக்கும் இடையே என்ன வித்தியாசம் வைத்திருக்கிறீர்கள் (தானியங்கி கதவு தவிற).எதற்க்காக போக்குவரத்து மிகுந்த காலை,மாலை நேரங்களில் சொகுசு பேருந்து மட்டுமே இயக்குகிறீர்கள். குறைந்த பட்சம் சாதரன பெருந்துகளை மட்டும் அதிகரிப்பதற்க்கும் ,வேலை நேரங்களில் சொகுசு பேருந்துகளை மட்டும் இயக்கும் பழக்கத்தினை மாற்றி சாதாரன பேருந்துகளையும் இயக்க ஆவன செய்யுமா இந்த‌ அரசு?.

                          நீங்கள் உருவாக்கிய வருமான கூடம் அரசு மதுபான வியாபாரம், நன்றாக பயன்படுத்தியவர்கள் போன ஆட்சியாளர்கள். ஆனால் அதில் வேலை செய்யும் படித்த இளைஞர் கூட்டம் என்ன பாவம் செய்தார்கள்,அவர்களின் பணி என்று நிரந்தரம் செய்யப்படும்,இதை நம்பி வேறு வேலையில்லாமல் இருக்கும் அவர்களுக்கு என்ன செய்தி சொல்லபோகிறீர்கள்?

5. ஈழம் மற்றும் கச்சதீவு பிரச்சனைகள்:


                  இந்த இரண்டு விசயத்திலும் நீங்கள் எடுத்த முடிவுகளை மனதார பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இத்தோடு நின்று விடாமல் மெலும் பல அழுத்தங்களை சர்வதேச நாடுகளுக்கும், மத்திய அரசுக்கும் கொடுக்க வேண்டுகிறோம். கச்ச தீவை பெறவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து ஒரு போதும் பின்வாங்காதீர்கள்
                      இலங்கை பொருள்களுக்கு தடை விதித்துள்ளது உண்மையில் அமலில் உள்ளதா? எனக்கு தெரிந்த சில இடங்களில் இலங்கை தயாரிப்புகள் விற்பனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக இந்திய தொழில்நுட்ப கழக வளாகம்(ஐ.ஐ.டி) போன்றவற்றில் தாராளமாக இலங்கை தயாரிப்புகள் கிடைக்கின்றன. எனக்கு தெரிந்த நண்பர்களிடமும் எடுத்து கூறி அவற்றை வாங்காமல் தவிர்க்கிறோம் மற்றவர்களை எப்படி தடுப்பது?. எப்படி இவற்றை கண்காணிக்க போகிறீர்கள், பெயரளவில் மட்டும் தீர்மானம் கொண்டு வருவது தேவை இல்லாதது அவற்றை எப்படி செயல் படுத்த போகிறோம்.


6. போக்குவரத்து நெரிசல்:

                         சென்னையின் இருக்கும் பெரிய பிரச்சனை போக்குவரத்து பிரச்சனை. நடந்து போய்விடலாம் என்று என்னும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தால் இதற்க்கான பிரச்சனை ஓரளவு முடியும் என நினைத்திருந்த மக்களின் நம்பிக்கையில் ஒரு கல் எறிந்து விட்டீர்கள். மெட்ரோ ரயிலுக்கு பதிலாக மோனொ ரயில் இயக்கப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அந்த திட்டம் எவ்வளவு காலம் இழுக்கும் இன்னும் எவ்வளவு காலங்கள் நாங்கள் இந்த போக்குவரத்து பிரச்சனையை சமாளிப்பது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை என்ன செய்ய போகிறீர்கள்? அந்த திட்டம் முடிந்து அதற்கான தடுப்புகளை என்று எடுபீர்களோ அன்றுதான் கொஞ்சமாவது போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வுகாண‌ முடியும். இந்த திட்டங்களுக்கு ஒரு தீர்வு காண முன்வருமா அரசு? 

7. நில அபகரிப்பு பிரச்சனை :

                  இது கண்டிப்பாக வரவேற்க பட வேண்டிய ஒன்று.ஆனால் இதிலும் சில திருத்தங்கள் வேண்டும் பலிவாங்கும் நோக்கோடு ஒரு சாராரை மட்டும் கைது செய்வது தவிர்க்க படவேண்டும். தவறு யார் செய்திருந்தாலும் அது ஆளுங்கட்சி, முன்னால் ஆண்ட கட்சி என்ற பேதமின்றி நடவடிக்கைகள் வேண்டும். நிறைய அரசியல்வாதிகள் தான் ஒரு கட்சி, தன் மகன் ஒரு கட்சி, தன் மைத்துனர் ஒரு கட்சி என குடும்பங்கள் அனைத்தும் அனைத்து கட்சிகளிடமும் தொடர்புகளை வைத்துள்ளனர். இவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் கண்டு பிடித்து கட்சி பாகுபாடின்றி செயல் படவேண்டும். ஏழை மக்களின் ரத்தங்களை உறிஞ்சியவர்களை சட்டதின் முன் சரியான தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் இதை சாதகமாக பயன்படுத்திகொண்டு பலிவாங்கும் நோக்கோடு செயல்படும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் வேண்டும், இல்லையென்றால் இந்த நடவடிக்கைகள் பலிவாங்கும் நடவடிக்கையாகவே மாறிப்போகும்.      
                                  
                         இவ்வளவு முக்கிய பிரச்சனைகளையும் இன்னும் பல பிரச்சனைகளையும் ஆராய்ந்து மக்களை முன்வைத்து தீர்த்து வைத்தால் தான் நம்பிக்கையுடன் ஓட்டு போட்ட மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை வரும். முந்தைய அரசு செயல்படுத்தியது என்ற ஒன்றிற்காக எல்லா திட்டங்களையும் குழிதோண்டி புதைக்க நினைத்தாலோ, மக்கள் துன்பம் அனுபவிக்கும் செயல்களில் இறங்கினாலோ பாதிப்பு உங்களுக்குதான் ஏனென்றால் மக்கள் இப்பொழுது புத்திசாலிகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஒன்று அவர்கள் அடுத்த தீர்ப்பு சொல்வதற்க்கு நான்கு வருடங்கள் ஆகும்.

Wednesday, July 6, 2011

பணம் பறிக்கும் இந்திய ஏழைகள்

               இந்திய தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி உலகத்திலேயே மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அறிவியல் துறையின் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது அதே சமயம் அந்த தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி எந்த அளவு பாமர மக்களை வளர்சிப்பாதைக்கு அழைத்து செல்கின்றது என்பதும் முக்கியம். அவை வளர்ச்சியைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றதா? இல்லை பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றதா?

வளர்ச்சி யாருக்கு..? பாதிப்பு யாருக்கு..?

        தொலைத் தொடர்புதுறை தொழிலில் லாபம் அடையாத நிறுவனங்களே கிடையாது அந்த‌ அளவுக்கு அவர்களின் வியாபார யுக்திகளும் , கவர்ச்சி அறிவிப்புகளையும் நாளுக்கு ஒன்றாய் அறிவித்து மக்களை முட்டாளாக்குதிலும் முன்னனியில் திகழ்கின்றனர். அந்த அறிவிப்பிலும், கவர்ச்சியிலும் மயங்கி எழ முடியாமல் திக்கி தவிப்பது மக்கள்தான். மக்களை இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம் ஒருசாரார் நன்கு சம்பாதித்து பொழுது போக்காய் செலவு செய்யும் மக்கள், அவர்களுக்கு இந்த பிரச்சனை ஒரு பொருட்டே கிடையாது, தெரியாமல் சாலையின் எல்லைக் கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தி விட்டு போக்குவரத்து காவல்துறையிடம் 100 அல்லது 200 ஐ கொடுத்து விட்டு சென்று கொண்டிருக்கும் மக்கள் அவர்கள்(எதிர் கேள்வி எதுவும் கேட்கமாட்டார்கள்). தேவைக்கும் அவசரத்திற்க்காகவும் மட்டுமே பார்த்து பார்த்து செலவு செய்யும் ஒரு சாரார்,அதே காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட பின்னும் கெஞ்சி ,மண்ணிப்பு கேட்டு எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து பணம் கொடுத்து மனசு நோகும் ஒரு சாரார்.

        இந்த இரண்டாம் வகையினர்களை பற்றி கண்டிப்பாக பேசியாக வேண்டும்.சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன் ஒரு உறவின் முறை (அவர் ஒரு கூலி தொழிலாழி) தனது அலைபேசியை எடுத்துகொண்டு என்னிடம் வந்தார்.

             "அப்பு நல்லா இருக்குறீங்களா? என்னானு தெரியல நான் எப்போ காசு போட்டாலும் எடுத்துகிறானுக என்னானு பாருங்கப்பு.."
 

                      என்று தனது அலைபேசியை கொடுத்தார்.அவர் அதை வைத்திருப்பதிற்க்கு காரணம் தனது மகள் வெளியூரில் படிக்கிறார் அவருடனான தொடர்புக்காக மட்டுமே அதை வைத்திருக்கிறார். நான் பார்த்தில் அவருக்கு தின ராசி பலன்(daily horoscope) மற்றும் மட்டை பந்து  சேவை(cricket update) என்ற இரண்டு சேவைகள் செயல்படுத்தப் பட்டிருந்தது. நான் வாடிக்கையாளர் செவை மையத்திற்க்கு பேசி அந்த செவைகளை நிறுத்தச் சொல்லி அவரிடம் அலைபேசியை கொடுத்து விட்டு வந்தேன்.

        இப்பொழுது சொல்லுங்கள் நம்மையும் அறியாமல் நம்மிடம் பணம் பறிப்பவர்களுக்கு என்ன பெயர்?. பல சமயம் அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியை படித்தாலே சில சேவைகள் செயல்பட்டு விடுகின்றது. ஒன்றும் தெரியாதவர்கள் என்ன செய்வது பணத்தை இழந்து நிற்பதுதான் மிச்சம். நுகர்வோர் மையத்தையோ நீதிமன்றத்தையோ அனுகலாமே என்று கூறும் அறிவு ஜீவிகளே இன்றைய சூழலில் நன்கு படித்து எல்லாம் தெரிந்தவர்களே நீதிமன்றம் , நுகர்வோர் மையம் என்று அழைவதற்க்கு முடியாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு செல்லும் போது பாமர மக்கள், ஏழைகள் என்ன செய்து விட முடியும்.

        அவர்களை தொடர்பு கொள்ளும் முன் இந்த பொத்தானை அழுத்து அந்த எண்ணை அழுத்து என்று படாத பாடு படுத்தி விடுவார்கள்,அதற்க்குள் நமது பொறுமை எல்லாம் கரைந்து விடும்.அப்படி தொடர்பு கொண்ட பின்னும் அவர்கள் நம்மை காக்க வைக்கும் நேரம் இருக்கிறதே அதை சொல்லி மாளாது.... 

           அலைபேசி வாடிக்கையாளர் மையம் எதற்க்கு என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.எத்தனை பிரச்சனைகளை அவர்கள் தீர்த்து வைத்திருப்பார்கள்? உண்மையாகவே இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை தெரியாதா? தெரிந்தும் ஏன் மறைக்கிறார்கள்? அவர்கள் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் 

"வணக்கம் தங்களுக்கு என்ன பிரச்சனை தெரிந்து கொள்ளாமா?" 
"காத்திருந்தமைக்கு நன்றி"
"விரைவில் சரி பார்க்கிறோம் சேவை மையத்தை அனுகியதற்க்கு நன்றி". 

இவைதான் பெரும்பாலும் கேட்க கூடிய பதில்.இதை சொல்வதற்க்கு எதற்க்கு அவர்கள்.இந்த லட்சனத்தில் அதை பதிவு வேறு செய்து கொள்கிறார்கள்.பதிவு செய்வதை ஒரு முறையாவது கேட்டிருப்பார்களா அதன் மேளாளர்கள்? பின்பு அப்படி இத்தனை பிரச்சனைகள். யாராவது சொல்லுங்கள் நீங்கள் வாங்கியதில் இருந்து உங்கள் அலைபேசி சேவையில் எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லையா?.

        குறைந்த பட்சம் ஒவ்வொரு நிறுவனமும் 10 கோடி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும்.ஒவ்வொருத்தருக்கும் குறைந்த பட்சம் 1 ரூபாய் மோசடி செய்வதாக கணக்கிட்டால் கூட‌ 10 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்,இவை குறைந்த பட்சம் அதிகபட்சம் எவ்வளவோ யாருக்கும் தெரியாது.இந்த நிறுவன தலைவர்கள்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் தங்களது வேலைகளை காட்டி பல கோடிகளை சுருட்டி இருக்கிறார்கள் ஆக நாட்டையும்,நாட்டு மக்களையும் சுரண்டி கொலுத்து பெருகும் இவர்கள் பணக்காரர்கள்... ஆனால் இந்தியா ஏழைகள் நிறைந்த‌ நாடு.

        குறைந்த பட்ச சமுதாய நோக்கம் கூட இல்லாமல் அப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள் இவர்கள்?. இப்பொழுதே பல பறவைகளை (எ.கா:சிட்டுகுருவி,செண்பகம் மற்றும் குயில்) காண முடிவதில்லை, பலருக்கு கதிர்வீச்சு பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவுகின்றது. எல்லாம் அலைபேசி கோபுரங்களின் அன்பளிப்பு. இவற்றையெல்லாம் முறைபடுத்தி சில இடங்களில் மட்டும் வைக்கலாமே ஏன் கண்ட இடங்களில் வைத்து பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். இயற்க்கையை ஏன் உதாசீன படுத்துகிறார்கள். சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பது போதாமல் ஏன் மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறார்கள். இந்த பணக்கார‌ ஏழைகள் எவ்வளவு நன்மைகள் இந்தியாவிற்காக செய்திருக்கிறார்கள்?

                    தொலைதொடர்பு துறையில் நன்மைகளே இல்லையா என்று கேட்க வேண்டாம். தீமைகளை களைய வேண்டும் என்பதே எண்ணம்.


        தனியார் மயம் என்ற போர்வைக்குள் என்று இந்தியா புகுந்ததோ அன்றிலிருந்தே போர்வைக்குள் நடக்கும் மர்மங்களும், கொள்ளைகளும் வெளித்தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. இந்த தனியார்மய வாதிகள் கடைசியில் பிடுங்குவது மக்களின் பணம். (இவர்கள்தான் இந்தியவின் பெரும்பணக்காரர்கள் ஆனால் இவர்கள் பிச்சைகாரர்கள், திருடர்களை விட கேவல
ம்). இந்த இந்தியாவின் நோய்களை, ஊழல் பெருச்சாலிகளை எப்படி புறக்கணிக்க போகிறோம்..? அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் நன்மைக்கு உட்பட்டு... யோசிப்போமா..?

Saturday, January 29, 2011

தயாராய் இரு என் தமிழினமே....



முப்ப‌து பேருந்து கொளுத்துவோம்
முழுவ‌தும் ஊர‌ட‌ங்கு செய்வோம்
அர‌சிய‌லுக்காய் அடித‌டி ப‌ண்ணுவோம் ஆனாலும்
அமைச்சர் பேர் சொல்லி அழ‌காய் த‌ப்பிப்போம்...

சொந்த நாட்டில் சுதந்திர கொடி ஏற்றா விட்டாலும்
அண்டை நாட்டு தேசத்திற்க்கு
அதிகாரம் கொடுப்போம் என்போம்

பாராளுமன்ற வளாகத்தில்
பத்து ரூபாய்க்கு உணவு கிடைக்கும்‍ இருந்தும்
ப‌த்தாது ச‌ம்ப‌ள‌ம் என‌
ப‌ல‌ம‌ட‌ங்கு உய‌ர்த்திக் கொள்வோம்...

பணம் பதுக்குவோம்
பட்டியல் இடமாட்டோம்
நிலம் அபகரிப்போம்
நேர்மை உள்ளவர் என்போம்...

ஏர் பிடிப்பவர் இறந்தாலென்ன‌
மீன் பிடிப்பவர் மறைந்தாலென்ன‌
இற‌ந்த‌வ‌ரின் கல்லறையில் கொடியேத்தி
ஏக‌போக‌அர‌சிய‌ல் செய்வோம்...

பாவ‌ப‌ட்ட‌ஜென்ம‌ங்க‌ள்
ப‌ட்டினியால் கிட‌ந்தாலென்ன‌
பாலும்,ப‌ல‌ச‌ர‌க்கும் விலையில்
ப‌ல‌ம‌ட‌ங்கு உய‌ர்ந்தாலென்ன‌...

எங்க‌ளை தேர்ந்தெடுக்க‌உங்க‌ளுக்கு
ஆயிர‌ம் ரூபாய் கொடுத்து
அடிமை ஆக்கிய‌ க‌தை தெரியாதோ...?

அறிவு ஜீவிக‌ள் யாரும்
வாக்கு ப‌திக்க‌வ‌ரமாட்டார் என்ற‌
அடிப்ப‌டைதான் எங்க‌ளுக்கு புரியாதோ...?

கொடிபிடிக்கும் என் தமிழினமே
கொண்டாட‌ த‌யாராய் இரு
ஆயிரம் ரூபாய் பணமும்
ஆட்டுக்கால் பிரியாணியும் தயார்
நாங்கள் வருகிறோம் உங்கள் வீட்டுக்கு
நீங்கள் தயாராய் இருங்கள் வாக்களிக்க...!!

Friday, November 26, 2010

வீரவணக்கம் ....!

26/11 மும்பை தாக்குத‌ல்

வருடங்கள் இர‌ண்டு நகர்ந்தது
வாழ்க்கையும் நகர்கின்றது
நீங்கள் விட்டு சென்ற
தடயங்கள்...தாகங்கள்...
இன்னும்...இன்னும்...என்றும்
நகர்வதில்லை தோழர்களே....

கொடுத்தீர்க‌ள் உயிரை எங்க‌ளுக்காக‌ - வ‌ந்த‌
கொடுங்கோல‌ன் இன்னும் இருக்கையிலே...
த‌டுத்தீர்க‌ள் பாதிப்பை நாட்டுக்காக‌
த‌ர‌மில்லா ம‌னித‌ர்க‌ளின் மூர்க்க‌த்தினாலே‌...

இழ‌ப்புக‌ளை எங்க‌ள் ப‌க்க‌ம் வைத்துக்கொண்டு
எதிரிக்கு இர‌ண்டு கோடிக‌ளை செல‌வ‌லிக்கிறோம்
புரட்சிகர மாவீரர் உங்க‌ளுக்கு
புண்ணிய‌மாய் என்ன‌ செய்தோம்...?

த‌ழும்புகளை த‌ங்க‌மாக‌ ஏந்திக்கொண்டு
விளிம்புக‌ளில் வீர‌ம‌ர‌ண‌ம் அடைந்தோரே...
நினைவுக‌ளில்... நேச‌ங்க‌ளில்... என்றும்...
எம்மை விட்டு எங்கும் நீங்க‌மாட்டீர் தோழ‌ர்க‌ளே...!

க‌ர்க‌ரே..காம்தே...கம்ப்ளே..சலாஸ்கர்...சந்தீப் - என‌
க‌ள‌ப்ப‌ட்டிய‌ல் நீண்டு இருக்கிற‌து...
காவிய நாய‌க‌ர்களே உங்க‌ள் நினைவுக‌ள்
க‌ண்ணீராய் எங்க‌ளோடு க‌ல‌ந்தும் இருக்கிற‌து...!

உயிரின் சுவாசத்தை நாட்டிற்காய்
ஒப்புவித்து கொடுத்தோரே - உங்களுக்காய்
உண்ர்வுகள் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் சொல்லுகிறோம்
உளமார்ந்த வீரவணக்கம்...!!

Monday, November 15, 2010

குடிமகனார்கள் ஜாக்கிரதை.....!

எழுதனும்னு நினைக்கும் போது நேரமில்லமை அது இதுனு ஏதவது ஒரு காரணத்தினாலே முடியாம போயிடுது சரி எழுதுவோம் எதையவதுனு கணினி முன்னால அமர்ந்தேன் என்ன எழுதலாம்னு நெனைக்கிறப்போ படிச்ச செய்தியும் நேத்து பாத்த இடமும் நினைவுக்கு வர இத எழுத ஆரம்பிச்சாச்சு.....

படித்த‌செய்தி :தீபாவளிக்கு "மதுபான‌கடை"யில் பயங்கர கூட்டம்: ரூ.300 கோடிக்கு மேல் சரக்கு விற்பனை

பார்த்த காட்சி :ஒரு "மதுபான‌கடை" பக்கத்தில் கழிப்பறை கட்டிடம் இல்லாத கழிபறையில் புரண்டு கிடந்த குடிமகனார்.

எதுவுமே ஒரு அளவுக்கு மேல போனா நமக்கு போதை அதிகம் ஆயிடுறது சகசம்தான் ஆனால் போதையே அளவுக்கு அதிகமா போனால் என்ன செய்வது.மனிதன் நிலைகுலைந்து தன்னை மறந்து தரையை மெத்தையாவும் கழிவுகளை வாசனையாகவும் ஏத்துகிட்டு மூச்சு இருக்கா இல்லையானு தெரியாத அளவுக்கு கிடந்த நான்பார்த்த அந்த மனிதரை போல கிடக்க வேண்டியதுதான்.அப்படி என்னத்த நான் பாத்துட்டேனு கேள்வி கேக்குறீங்களா இதோ இதுதாங்க நடந்தது....

நான் தினமும் போய் வரும் வழியில் ஒரு மதுபான‌கடை(அங்க மட்டும்தான் இருக்கானு கேக்குறவுங்க மண்ணிச்சுகோங்க எங்கெங்கு இருக்கோ அங்கேயெல்லாம் அப்பிடிதான்னு நினைக்கிறேன்) தினம் நான் போகும்போது மூக்கை பிடிக்காம நடந்து போறதுங்கிறது அவ்வளவு எளிதான காரியம் இல்ல அந்தளவுக்கு நாற்றம்,யாராவது சரக்குதான் அந்த அளவுக்கு வீசுதுனு தப்பா நெனெச்சிடாதீங்க அது சரக்க அடிச்சுட்டு குடிமகனார்கள் விட்டு செல்லும் சரக்குகள்.எல்லா விற்பனை நிலையங்களுக்கு அருகிலேயும் இப்படிபட்ட திறந்தவெளி கழிப்பிடங்களை காண முடியும்.அப்படி பட்ட இடத்துல உச்சகட்ட உற்சாகத்தில ஒருத்தர் படுத்து உருண்டுவருகிறார் வேறென்ன சொல்ல.....

மூனு மணிநேரம் கடையில உக்காந்து மூச்சுமுட்ட குடிக்கிறது வெளில வந்ததும் வெளியெத்தி விட்டுறது,மூனு மணி நேரம் பொருத்த நீங்க கொஞ்சம் கழிப்பிடம் தேடிபோய் வெளியேற்றலாம் இல்லியா?.குடிமகனார் யாரையும் நான் குற்றம் சொல்றேன்னு தப்பா எடுத்துகாதீங்க ஏன் நான் சொல்றேனா நீங்களே உற்ச்சாக மிகுதியில அதில உருண்டு புரள வாய்ப்பிருக்குதில்லையா நான் பார்த்த அந்த நபரைபோல நீங்களும் ஒருநாள்...(!) அதனால உங்க சுற்றத்தை நீங்கதான் சுத்தமா வெச்சிருக்கனும் முடிஞ்ச அளவு சுத்த‌மா வெச்சுகோங்க‌… இல்ல குறைந்த பட்சம் நீங்க‌சுத்த‌மெல்லாம் ப‌ன்னா‌விட்டாலும் அசுத்த‌ம் ப‌ன்னாம‌இருங்க‌ள்.நீங்க‌ளும் த‌ப்பிப்பீர்க‌ள் அடுத்த‌வ‌ர்க‌ளும் த‌ப்பிப்பார்க‌ள்.....

இப்போதெல்லாம் நம் மக்கள்,முக்கியமா நம்ம இளைஞர்கள் ரொம்பபப‌... முன்னேறிட்டாங்க ஒரு பொண்ணு பாத்துட்டா,பரீச்சையில தேர்ச்சி/தோல்வி அடைஞ்சா, உடம்புல அடிபட்டா ,சம்பளம் வந்தா,அலுவலகத்தில மேளாளர் பாராட்டினா/திட்டினா,காலைல சீக்கிறம் எழுந்தா,மூச்சா போகலைனா கூட... கொண்டாடனும்…... கொண்டாடனும்…...அதுதான் குறிக்கோள்….. அதுக்கு ஒரே ‘ம(வி)ருந்தா’ இதை எடுத்துக்கிறாங்க....

இப்பொதெல்லாம் எதுக்கெடுத்தாலும் ஒரு காரணம் சொல்லிட்டு குடிக்கிறது வழக்கமா போயிடுச்சு,குடிங்க அது உங்களோட சுதந்திரம்...விருப்பம்...அதுலயும் முக்கியமாக நாட்டோட வருமானத்துல உங்களோட பங்கு ரொம்பவும் முக்கியம் ஆகவே குடிமகனார்களே குடிங்க ஆனா யாருக்கும் பாதிப்பு வராம பாத்து குடிங்க(உங்களையும்தான் சேர்த்து சொல்றேன் உங்களுக்கும் பாதிப்பு வராம பாத்துக்கோங்க‌). உங்களுக்கு அறிவுறை சொல்ற அளவுக்கு நான் பெரியவன் இல்லை (மப்புல இருக்குற ஒருத்தரை அறிவுறை சொல்லிட்டு தப்பிச்சுட முடியுமா என்ன?)

இந்த விசயத்துல கிராமம்/நகரம் அப்படி எந்த பாகுபாடும் இல்லீங்க எல்லாருமே இப்பொ அதுக்கு அழையாத விருந்தாளியா இருக்கங்க.இப்போ எல்லாம் வீட்டுல நடக்கிற நல்ல ஒரு நிகழ்ச்சிக்கு போனாகூட அதுவும் ஒரு விருந்தா தனியா இருக்கு.இதற்கெனெ நிதிநிலை அறிக்கை கூட தாயரிக்கிறாங்க எல்லா செலவோடையும் இதுக்கும் தனியா ஒரு தொகை ஒதுக்கி விடுகிறார்கள்.யாராவது கலந்துக்காத ஆட்களையும் புடிச்சி தம்பி இது குளிர்பாணம் மாதிரிதான் தம்பி… ஒண்ணும் செய்யாது சும்மா சாப்பிடுங்கனு உசுப்பெத்தி விடுராங்க... ம்ம்ம் என்ன பன்றது காலம் 'குடி'காலம் ஆயிபோச்சு....

இப்படித்தான் நான் தங்கி இருந்த அறை நண்பர்கள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கையில பையோடு வரும்போதெல்லாம் கொஞ்சம் பயமாகவே இருக்கும்.இவங்க காலைல முழிச்சு போற வரைக்கும் வாந்தி(இதுக்கு ஆப்‍‍பாயில் னு பேரு வேற‌) எடுக்காம இருக்கனுமே அப்படிங்கிற நினைப்புலேயே பாதி தூக்கம் போயிடும்.அவங்களுக்கு எதுவுமே தெரியற‌து இல்ல சுயநினைவு இருக்குற வரைக்கும் ஏதாவது ஒரு தலைப்பு எடுத்து பேசுறது(உண்மையிலேயெ ரொம்ப நல்லவங்களாக மாறிடறாங்க...).அதுவரைக்கும் சண்டை போட்டு பேசாதவன்கிட்ட கூட நீ என் நண்பேண்டா... னு வசனம் பேசுறது இப்படி பல நகைச்சுவைகள் நடக்கும்.கொஞ்சம் உச்சம் அடைஞ்ச உடனே ஒரு சின்ன சத்தம் கேக்கும் உவ்வேனு... பக்கத்துல இருக்கிறவன் எச்சரிக்கையா இருக்கனும் இல்லை அவ்ளோதான்.வேறென்ன அந்த இடமே நாறிபோயிடும் அதன்பிறகு அறையை சுத்தபடுத்துறதில இருந்து அவர்களை கழுவுறது வரைக்கும் தெளிவா இருக்குற யாரவதுதானே பண்ணனும் இப்போ புரியுதா ஏன் பயப்படனும்னு.

இதவிட ஒரு பெரிய நகைச்சுவை நடந்துச்சு,இப்ப்டித்தான் ஒருநாள் உச்சகட்ட உற்ச்சாகத்தில் உவ்வேவே போயிட்டு நல்லா அவன் தூங்கிட்டான் நாங்க எல்லா சேவைகளையும் செய்துட்டு தூங்க முடியாம நேரம் கழிச்சு தூங்கி எழறதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிட்டுது.அவன் எப்ப‌டியோ சீக்கிறமாகவே எழுந்துட்டான் எழுந்தவன் எல்லோரையும் எழுப்பி திட்டுனா திட்டு அவ்ளோ திட்டு திட்டுறான் என்ன காரணம்னு கேக்கலையே மக்கா..?

யாரோ வாந்தி எடுத்துட்டாங்களாம்... ஒரே வீச்சமா இருக்காம்...ஏண்டா குடிக்கிறவன் ஒழுங்கா குடிக்கிறதில்ல ஏண்டா இப்படி வாந்தி எடுத்து தொலைக்கிறீங்க னு கேள்வி வேற...(?!)

என்ன கொடுமை மக்கா..?

நீதாண்டா வாந்தி எடுதவன்னு சொன்னா அவன் நம்பவே இல்ல கடைசி வரைக்கும். எனக்கும் இதுவரைக்கும் நம்பவே முடியலைங்க அவன் உண்மையிலேயே பேசுனானா இல்ல தெரிஞ்சுதான் அப்பிடி பெசனும்னு பேசுனானா?

மப்பில்லாத நேரம் பாத்து பதில் சொல்லுங்க மக்கா.....:)