Thursday, November 24, 2011

ஒரு பயணத்தின் கதை...

அவசர பயண முடிவுகளில்
பெரும்பாலும்
இரயில் பயணம் சாத்தியமில்லை... 

உடல் கிழிக்கா இருக்கை வேண்டும்
உடனே திறக்கும் கண்ணாடியோடு
உலுக்கி எடுகாத பேருந்து‌‌ வேண்டும்...


உணவு தண்ணீர் எடுத்து
உணர்வோடு வைக்க வேண்டும்
இல்லையெனில்
உணவகங்களுக்கு ஒரு நூறு
அழுதாக வேண்டும்...

சிரித்த முகத்துடனே நடத்துனர்

சில்லரை தரவேண்டும்
சேரும் நேரம் கேட்டால்
சீராத ஓட்டுனர் வேண்டும்

ஏழையாய் இருந்தாலும்

இவையோடு சேர்ந்து இப்பொழுது
இருமடங்கு கட்டணமும் வேண்டும்...

அத்தனை இடர்படுகளும்

அர்த்தமற்றதாகி போகின்றன‌
அன்பு நிறைந்த
உறவுகளை பார்க்கும்போது...

மீண்டும் அதே பயணம்

மாறாத அதே அழுத்தங்கள்
இருந்தும் தயாரகிறோம்
அடுத்த பயணத்தை நோக்கி
சொந்த ஊரின் சுகத்தை அனுபவிக்க....!

Friday, November 18, 2011

மக்கள் போ(தூ)ற்றும் அரசு....!



           மக்கள் அரசு என்பது மக்களை அரவணைப்பதாகவும் , அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் மற்றும் முன்னோடியாக போற்றுதலுக்கு உரியதாகவும் இருக்க வேண்டும்.

"நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி,சிவசக்தி!-என்னை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? "
                       -- பாரதியார்

நல்ல ஒரு காரியம் செய்து அதை குப்பையில் போடுவதற்காகவா மனிதனை அறிவுடன் படைக்கப்பட்டான். நல்ல காரியம் செய்யாவிட்டாலும் பரவயில்லை பிறர் செய்த நல்ல காரியங்களை குப்பையில் போடுவது என்பது மிகபெரிய மனித துரோகம். முற்காலத்தில் போரிட்டு நாடுகளை கைப்பற்றும் போது கூட அந்தந்த நாடுகளில் உள்ள அறிவு சார்ந்த விசயங்களை ஒரு பொழுதும் அழிக்க முற்பட்டதில்லை ஆனால் தற்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளை பொறுத்தி பார்க்கும் போது நாம் பெற்ற வளர்ச்சியெல்லாம் ஒன்றுக்கும் உதவ போவதில்லை என்பது மட்டும் திண்ணமாகின்றது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றம் என்ற அறிவிப்பு வாசிக்கும் பழக்கமுடைய அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி. ஒரு நூலகத்திற்கென்றே வடிவமைப்புகளுடன் கட்டபட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக்குவது என்பதும் வீண்செலவான விசயம்.அப்படி மாற்றும் செலவினங்களோடு கூடுதலாக நிதி சேர்த்து புதியதாக ஒரு மருத்துவமனையையே கட்டிவிடலாம் அப்படி இருக்க நூலகத்தை இடமாற்றம் செய்வது என்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. நூலகங்களின் எண்ணிக்கை உயர்வது நிச்சயம் நல்ல விசயம்தான், ஆட்சியாளர்கள் அதனை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என நினைப்பவர்கள் ஏன் ஒரு புதிய நூலகத்தை கட்டகூடாது?. சென்னை இல்லாது மதுரை,திருச்சி மற்றும் கோவை போன்ற நகரங்களில் நூலகத்தை கட்டுங்கள் யார் உங்களை வரவேற்காமல் இருக்க போகிறார்கள்.அதை விடுத்து காழ்ப்புணர்ச்சியில் செய்யும் செயல்கள் நிச்சயம் ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் ந‌ம்பிக்கை தர்மம் கிடையாது மாறான துரோகம்.

கட்டண‌ உயர்வுகள் :

    எந்த ஒரு சாமனிய மனிதனும் ஏற்றுகொள்ள முடியாத அளவு விலை ஏற்றங்கள் நடந்துள்ளது.நாம் அறிந்த வரையில் பெரும்பாண்மையான மக்களை முகம் சுழிக்க வைக்கும் ஒரு காரியம் இது.ஏற்கனவே விலை உயர்வுகளை சந்திக்க முடியாமல் துண்பங்களில் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு இது மேலும் பலத்த அடி.பால் விலை உயர்வு 6 ரூபாய்,பேருந்து கட்டணம் 40 ல் இருந்து 60 சதவிகிதம் உயர்வு எண்பது சதாரண மக்களை நேரடியாக பாதிக்க கூடிய விசயங்கள்.இந்த விலை உயர்வுக்கு எடுத்து சொல்லும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.

1.மத்திய அரசின் நிதி வரவில்லை: இது எப்படி நம்ப தகுந்ததாக இருக்க முடியும்.எல்லா மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டு கொடுக்கதானே மத்திய அரசு இருக்கிறது,மற்ற மாநிலங்கள் இதைபற்றி ஒரு குறையும் சொல்லவே இல்லையே.நீங்கள் உங்களது சுய விளம்பரத்திற்காக கொடுக்கும் இலவசங்களுக்கு நிதிஉதவி கேட்டால் எப்படி மத்திய அரசு கொடுக்கும்,இதை நீங்கள் இலவசங்களை அறிவிப்பதற்க்கு முன்னால் அல்லவா யோசித்திருக்க வேண்டும்.அப்ப‌டியே மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் அதை வாங்கும் முயற்ச்சி செய்யாமல் மக்களின் தலைமேல் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்.

2.ஆவின் மற்றும் போக்குவரத்து கழகங்கள் இழப்பில் இயங்குகிறது:
இந்த கழகங்கள் இழப்பில் இயங்குவதற்கு யார் காரணம்? அவை வெற்றிகரமாக இயங்குவதற்கு என்ன முயற்ச்சிகள் எடுத்தீர்கள்?. காரணத்தை அறியாமல் அந்த சுமையை மக்கள் மேல் ஏன் சுமத்துகிறீர்கள்.இந்த விலை உயர்வினால் அந்த நிறுவனங்கள் நல்ல நிலை அடையுமா? பக்கத்தில் உள்ள கர்னாடகத்தில் நீங்கள் தற்போது உயர்த்திய விலையை விட 30 சதவிகிதம் குறைவு ஆனால் அவர்களின் பராமரிப்பிலும் சேவைசெய்யும் விதத்திலும் மிகவும் தரமானவர்களாக இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது மற்ற மாநிலங்களை கட்டண‌ விசயத்தில் மட்டும் நீங்கள் ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்.கட்டணங்களை உயர்த்திய நீங்கள் வசதிகளை பெருக்குவதற்கும் ஒழுங்காக சேவை செய்வதற்கும் என்ன உத்திரவாதம் தந்திருக்கிறீர்கள்.


                    இழப்பில் இயங்குகிறது என்பதற்காக இரண்டு நிறுவனத்தையும், அலுவலர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கதை சொல்லும் நீங்கள் 15,000 கோடி வருமானம் வரும் மதுபான நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களை ஏன் நிரந்தர பணியாளர்களாக மாற்ற மறுக்கிறீர்கள் ,அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுப்பது ஏன்? 13,000 மக்கள் நல பணியாளர்களை எந்த அடிப்படையில் வெளியேற்றினீர்கள்.இழப்பில் இயங்கும் நிறுவனத்திற்க்காக விலையை உயர்த்தும் நீங்கள்,லாபத்துடன் இயங்கும் நிறுவன ஊழியர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்காமல் கூட வதைப்பது எப்படி சரியானதாகும்.ஏன் இந்த பாகுபாடு செய்கிறீர்கள்,எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தானே பார்த்திருக்க வேண்டும்.பால் கொள்முதல் விலை 2 ரூபாய் அதிகரிப்பு ஆனால் விற்பனை 6 ரூபாய் அதிகரிப்பு.பால் உற்பத்தி செய்யும் மக்களுக்கு எந்த லாபமும் கூடாதாம் ஆனால் மக்கள் மேல் சுமையை ஏற்றி லாபத்தை சம்பாதிக்கலாமாம் இது எந்த வகையில் மக்கள் நலனை சார்ந்ததாக இருக்க முடியும்? .
            சாதாரண , நடுத்தர மக்கள் ஏற்கனவே பல்வேறு வரிச்சுமைகளிலும் நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கையில் மீண்டுமொரு பெரியொதொரு விலையேற்றம் என்பது ஏற்றுகொள்ளவே முடியாது.இனிமேல் தேனீர்,காப்பி என்பதெல்லாம் திருநாளுக்கு செய்யும் பதார்த்தம் போல் ஆனாலும் ஆச்சர்ய படுவதற்க்கு ஒன்றுமில்லை.இரயில் பயணங்களுக்கு கூட்டம் அதிகபடியாக அலைமோதும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. இந்த விலை உயர்வை முன்வைத்து தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்திக்கொள்வது நிச்சயம்,ஆக யோசித்து பார்த்தால் தனியார் நிறுவனக்களின் சதி இங்கு இருக்க கூடும் என்பது பாமரனுக்கும் புரிந்து போய் விடுகின்றது.இதற்கு மேலும் மக்கள் போற்றும் அரசா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவெடுப்பர்.எது எப்படியோ ஓட்டு போட்ட மக்கள் ஏதோ முனுமுனுப்பது தெரிகிறது.ஆனால் என்ன செய்வது இன்னும் 4 ஆண்டு காலம் தலை எழுத்தை மாற்ற முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

Tuesday, September 6, 2011

மழை நாளின் மிச்சம்...!

கை வலிக்குமென்றென்னி
காதலோடு குடையை நான் கேட்க‌
வேண்டாமென முறைத்தாய்
வேண்டும் என்றே என்னை
வெட்க மழையில் நனைத்தாய்....

அவயங்கள் பட்டுவிடுமோ என‌
அதீத‌ எச்ச‌ரிக்கையில்
அச்ச‌த்தோடு நான் ந‌ட‌க்க‌...
நீ
நெருங்கி ந‌ட‌ந்து வ‌ந்து
நெருப்பு சுவாச‌த்தால்
நெஞ்ச‌த்தை குலைத்தாய்....

ம‌ழையின் குளிர்
ம‌ன‌திற்க்குள் இருக்க‌
உடலின் குளிரையெல்லாம்
ஓரக்கண்ணால் விரட்டி அடித்தாய்...

மழைநீரை கையில் ஏந்தி
மாறி மாறி என்மேல் எரிந்து
தண்ணீரை கூட கை வைத்து
பண்ணீராக்கி தந்தாய்....

ச‌ல‌ ச‌ல‌த்த‌ கொலுசு ச‌த்த‌ம்
ச‌ட‌ ச‌ட‌வென்ற‌ ம‌ழை நீரில்
ச‌த்த‌ம் ஓய்ந்த‌துபோல்
ப‌ட‌ ப‌ட‌த்த‌ என் ம‌ன‌தினை
ப‌தை ப‌தைத்த‌ உன் விர‌ல் தொட்டு
யுத்த‌ம் நிறுத்தி கடந்தாய்.....

சத்தமில்லாமல் என்மனதில்
சாகசங்கள் பல‌ புரிந்தாய்  - ஓர்நாள்
சந்தியில்நின்று ஏதுமில்லை எனசொல்லி
சாதுர்யமாய் எனை பிரிந்தாய்...

ஆனால் நான்
கொஞ்சம் நேற்று பொழிந்த‌
கோடை சிறு மழைக்கே
கலையாத‌ உன்நினைவுகளில்
களிப்போடு நனைந்து வந்தேன் - இப்படி
மொத்தமாய் கொட்டிதீர்த்த‌ மழைகளில்
மிச்சமாய் நின்றது எனது காதலும்..
உனைப்பற்றிய எனது கவிதைகளும்தான்...!


வெளிவந்த படைப்பு நன்றி :தமிழ்ஆதர்ஸ்.கொம்

Sunday, September 4, 2011

கலங்கி போன சாமி...

அதிகாலை நான்கு மனிக்கு
அக்னி வளர்த்து யாகம்
காலையில் களைகட்டும்
பொங்கல் விழா
மதியம் கருவாட்டு குழம்பு கூழ் ஊற்றி
மகிழ்ச்சி கொண்டாட்டம்
மாலையில் கரகாட்டம் அதில்
மதி மயங்கும் குத்தாட்டம்
இரவில் தேர்ப்பயண வீதிஉலா என‌
இனிமையாக இருந்தது திருவிழா...

நள்ளிரவு ஆடல் பாடலில்
தலைவன் பாடல் போடவில்லை என்ற‌
தடியடி கலவரத்தில்
தப்பித்து ஓடிய கூட்டத்தைப் போலவே
கருவறைக்குள் நடுங்கியபடி
கலங்கிக் கொண்டிருந்தது
எல்லோரையும் காக்கும் சாமி...!

நன்றி : கீற்று

Thursday, August 25, 2011

நேற்று முளைத்த காளானும்... பழைய பூதங்களும் ...

                 அன்னா ஹாசரே மெற்கொள்ளும் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்க்கு இவ்வளவு ஆதரவை கண்டு உண்மையில் இது இந்தியாதானா எனும் அளவுக்கு ஆச்சர்யம் எழுகின்றது , நாம் சாரசரி வாழ்க்கையில் ஊழல் இல்லாத இடமே இல்லை... பழகிப்போன, கறைபடிந்த, அர்த்தமில்லாத,தேசத்தின் துரோகமான‌ ஊழலை எதிர்ப்பது என்பது சாதாரன விசயமில்லை,அதற்கு பெருகி வரும் ஆதரவுகள் நிச்சயம் பாராட்டக்கூடிய விசயம்தாம்.

                  எல்லாம் சரிதான் இவ்வளவு நாளாய் எங்கே போனாய் என் தேசமே? வேறு எவறுமே போராடவில்லையா? இல்லை போராடியவர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? போராடியவர்களை இந்த ஊடகம் சரியாக உங்களுக்கு அடையாளபடுத்த வில்லையா? இல்லை எல்லோரும் ஆதரவு தருகிறார்கள் நாமும் கலந்து கொள்வோம் என்று சொல்கிறீர்களா? இல்லை மட்டைபந்தில் சொதப்பிய இந்திய அணியை பார்த்த வெறுப்பில் வந்த கூட்டமா, நாளைக்கே இந்தியாவை கடனாளியாக்கி விட்டு இரண்டொரு வெற்றிகளை குவித்து விட்டால் தொலைக்காட்சி முன் அமர்ந்து தவமிருக்க‌ போய்விடுவீர்களா?.
 

        தனியார் முதலாளிகளின் ஊழலுக்கும்,அரசு ஊழியர்களின் ஊழலுக்கும் எதிராய் கிளர்தெழுந்தவர்களை நக்சல்கள் என்று கூறி அடக்குகிறோம்.அவர்களின் போராட்ட பாதை தவறு என ஏற்றுக்கொள்ளும் அதே தருணத்தில், அவர்களின் போராட்ட காரணத்திற்கு என்ன பதில் சொன்னோம். இயற்கை வளங்களை அபகரிக்கும் தனியார் முதலாளிகளை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் ஊழலுக்கு ஆதரவு தரும் அரசையும் நம்மையும் என்னவென்று சொல்வது(இதைதானே அருந்ததி ராயும் வழியுறுத்தி சொல்கிறார்).இதைப்போன்ற பழைய பூதங்களை நம் கண் முன் மறைக்கப்பட்டது ஏன்?.அவற்றை பற்றி அறிந்து கொள்ள கூட முற்படாத‌ நாம் நேற்று கிளம்பிய ஊழல் போராட்டதிற்கு ஆதரவு தருகிறேன் என்று கிளம்புவதும், இதை வைத்து ஆதாயம் தேட விளையும் புல்லுருவிகளை பாராட்டுவதையும் நினைத்தால் நகைச்சுவைதான் வருகின்றது.

        இவ்வளவு ஏன்? அன்னா ஹசாரே போராட்டம் நடத்தும் இதே நேரத்தில் இன்னொரு முக்கிய போராட்டமும் நடைபெறுகின்றது அதுவும் பாராளுமன்ற வாசலிலேயே நடக்கிறது, அதுவும் நம் வாழ்க்கை சம்பந்தபட்ட ஒன்றுதான் எத்தனை பேருக்கு அந்த போராட்டம் தெரியும்? எத்தனை பேர் அதற்கு ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்? அதுவும் இன்றியமையாத உணவு பொருள் மரபனு கலப்பினத்திற்கு எதிராக‌ பசுமைபுரட்சி(கிரீன்பீஸ்) அமைப்பினர் செய்யும் ஆர்பாட்டம். இந்த "இந்திய உயிரி‍தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்" மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதை அனுமதித்தால், வளரும் சந்ததிக்கு நம் கையினாலேயெ பூச்சிக்கொள்ளியை உணவு என்னும் பெயரில் கொடுக்க நேரிடலாம், மேலும் மரபனு பற்றி தவறாக மக்களிடத்தில் சொன்னாலே சிறை தண்டனையாம். என்ன ஒரு கொடுமை , தனியார் மயவாதிகளும் ,அரசியல் வாதிகளும் இணைந்து செயல்படுத்த போகும் இப்படி பட்ட‌ ஒரு மசோதாவும்தான் இருக்கிறது.இதை பற்றி என்ன சொல்ல போகிறோம்? இதற்கு ஏன் மக்கள் யாரும் திரளவில்லை?


            ஊழல் எதிர்ப்பு முறையாக அமல்படுத்தப்பட்டு நல்ல காரியங்கள் நடக்கும் என்றால் அது நல்லது.இந்த போராட்டம் "லொக்பால்" வரம்புக்குள் பிரதமரும் வரவேண்டும் என்றும் உடனே அமல்படுத்த வேண்டும் என்று தொடர்கிறது.அப்படி நடைமுறைபடுத்திய பின் எல்லாம் சரியாக நடக்குமா? அதற்கு என்ன உத்திரவாதம் தரமுடியும்.இதை ஆதரிக்கும் எதிர்கட்சிகளும் நாளை ஆட்சிக்கு வந்தால் மாறக்கூடும்,இன்னும் சொல்லப் போனால் எதிர்கட்சிகளின் அரசியலுக்கு அன்னா பலியகிறாரோ என்ற எண்ணம் கூட வருகின்றது.இன்று ஊழலுக்கு எதிராக கொடி பிடிக்கும் நாம் சாதீயம் குறித்தோ, ஏழ்மை நிலைக்கு எதிராகவோ போராடும் போது அவரவர் வேலை பார்த்து கொண்டுதானே செல்கிறோம்.சுதந்திரம் வாங்கியதில் இருந்து துயரப்படும் அடித்தட்டு மக்களுக்கு எவரும் போராட முன் வருவதில்லையே அல்லது அப்படி வருவோரை மட்டம் தட்டுவதிலேதானே நாம் காலத்தை கழித்திருக்கிறோம். இது குறித்து எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? இல்லை சிலர் போல் "அதற்கெல்லாம் போராட ஆள் இருக்கிறார்கள்" என்று சொல்ல வருகிறோமா? இல்லை "நான் செய்யலாம் என்று இருந்தேன் அவர்கள் செய்கிறார்கள்,நான் எப்படி அவர்களுக்கு ஆதரவு தரமுடியும்" என்று சொல்ல வருகிறோமா? (இப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்று ஊழல் எதிப்பு போருக்கு ஆதரவு தருகிறார்களாம்!?). இவையெல்லாம் மாறி என்று நாம் ஒரே சிந்தனையில் உருப்பெற போகிறோம்? தமிழர்கள் நாம் ஒன்றினைந்து நினைத்திருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏன் உலகையும் கூட இலங்கை விசயத்தை புரிதல் செய்திருக்க முடியும் ஆனால் நம் போராட்ட களங்களை தனியாக பிரித்து, நமக்குள் தனிதனியாய் பிரிந்து நம் சொந்தங்களை இழந்து பழி சொல்லுக்கு இன்று ஆளாகி இருக்கிறோம். இவையெல்லாம் நம் கண்ணில் தெரியாமல் மறைத்த‌ புண்ணியத்தை யார் செய்தது? அப்போதெல்லாம் எங்கே போயிருந்தது இத்தனை பெரும் இந்தியா?  
    
                                           ஊழல் விசயத்தில் நான் கொடுக்கமாட்டேன், வாங்கமாட்டேன் என்ற இரண்டு விதிகள்தான் ஆனால் சராசரி பதில் என்ன வரும்?, "நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் ஆகாது".இந்த பதில் எல்லாம் அர்த்தமில்லாத ஒன்று,சாத்தியம் என்று வருகிறதோ அன்று சிறிய அளவிலும் சரி,பெரிய அளவிலும் சரி ஊழல் இருக்காது.இதே அரசு "லோக்பால்" மசோதா நிறைவேற்றினாலும் ஊழலை மறைக்க முடியாது காரணம் மனிதர்களிடம் பணம் சேர்க்கும் ஆசையும்,வெறியும் புரையோடிபோய் கிடக்கின்றது.நேர்வழியில் சம்பாதிக்க எவரும் விரும்பாத நிலை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.நாம் அரசியல்வாதிகளையும்,அரசு அலுவலர்களையும்,தனியார் முதலாளிகளையும் குறைசொல்லி ஒன்றும் பயனில்லை, நாமும் மாறவேண்டும் அதுதான் ஊழலை ஒழிக்க நிரந்தர வழி.ஒவ்வொரு மனிதனும் மனிதனாய்,இந்தியனாய் நினைத்தால் அது முடியும். போராட்டம் என்பது மனித‌ சக்தியை திரட்டும் பெரும் யுக்தி, யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக உங்களை இணைத்துக் கொள்ளாமல் சுயமாக சிந்தனை செய்து போராடுங்கள்.நேர்மையான நல்ல காரியங்கள் நடக்கவேண்டும் என்பதற்காய் போராடுங்கள். மனிதன் மனிதனாய் வாழ்வதற்கு போராடுங்கள்.

        இந்தியா நிறைய இடங்களில் முன்னேற வேண்டியதிருக்கிறது சாதீயம்,மதம்,ஏழ்மை,தீவிரவாதம்,ஊழல் மற்றும் இன்னும் பற்பல.இவை எல்லாம் முற்றிலும் மாற வேண்டுமானால் மனிதர்கள் நாம் மாறவேண்டும் அதுதான் இந்தியா ஒளிர்வதற்க்கு விளக்காகுமே தவிற இது போன்று ஒருவர் பின்னே ஓடிவரும் செம்மறி ஆடுகளாய் இருப்பது நமக்கு அவசியமே இல்லாத ஒன்று.எதற்காக போராடுகிறோம் என்று அறிந்து பின்தொடர்வோம், போராடுவோம். ஒவ்வொரு இந்தியனும் நினைத்தால் சாதீயம், மதம்,ஏழ்மை, தீவிரவாதம், ஊழல் எதுவுமே இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.ஆம் நாம் நினைத்தால்தான் அது முடியும்.
       

Monday, August 8, 2011

காதல் பக்கம் ‍ - 1






Wednesday, July 27, 2011

காத்திருக்கும் தீர்ப்பு....!

காத்திருக்கும் தீர்ப்பு...                

              தமிழகத்தின் ஒவ்வொரு தமிழனும் வாதிடும் சூடான சமாச்சாரம் சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வியைப் பற்றி பல்வேறு தரப்பினர் சார்பாகவும்,எதிராகவும் அலசி ஆராய்ந்த பிறகு அதனை பற்றி எழுதி கட்டுரையின் பாதையை மாற்ற விரும்பவில்லை, ஆனால் தமிழகத்தில் இன்றைய நிலையில் பாதிக்கப்படும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன அவற்றை பற்றி விளக்குவதே கட்டுரையின் நோக்கம்.

 
1. சமச்சீர் கல்வி:
               இன்றைய சமச்சீர் கல்வி விசாரணையில் உச்சநீதி மன்ற நீதிபதி கேட்ட கேள்வி:
 "எப்போது சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்? காலக்கெடு ஏதாவது உள்ளதா? " 

தமிழக அரசு நீதிபதியின் பதில்:

"2012-ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முயற்சி செய்யப்படும்"

                     ஆக 2012 லும் முயற்ச்சி செய்யப்படும் உறுதி கிடையாது. இவ்வளவு முட்டுக்கட்டை சமச்சீர் கல்விக்கு ஏன்? ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் இந்த விசயத்தில்.

எங்களுக்கு சில கேள்விகள் மனதில் எழுகின்றன.

* நீதிமன்றங்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஆணையிடுகின்றனவே அவை எதையும் ஆராயாமலா சொல்கிறார்கள்?. நீதிமன்றம் மாறுதல் செய்து கொள்ளலாம் என்று சொன்ன பிறகும் சரியில்லை... சரியில்லை... என்று பிடிவாதம் பிடிக்கும் நோக்கம் என்ன?

* இத்தனை பேர் சேர்ந்து(இந்திய தொழில் நுட்ப கழக பேராசிரியர்கள் உட்பட) உருவாக்கிய பாட திட்டம் தவறு என்றால் நீங்கள் உருவாக்கும் குழு மட்டும் எப்படி அறிவாளிகளாக இருந்து விட முடியும்?

* ஒரு புத்தகம் முழுக்க ஒரு சார்பாக இருக்க முடியாது , சார்பான பக்கங்களை ம‌ட்டும் வெட்டி எடுத்து விடுவதில் என்ன சிரமம் இருக்க போகிறது?

* நீங்கள் உருவாக்கும் குழு உங்கள் துதி பாடி சமச்சீர் புத்தகத்தை மாற்றவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? இல்லை தனியார் பள்ளிகளை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?(நீங்கள் உருவாகிய சமச்சீர் கல்வி ஆய்வு குழுவை ஆராயும் போது மேற்குறிப்பிட்ட இரண்டும் உண்மை போல்தான் தோன்றும்)

* இன்றைய நிலையில் மாணவர்களை இப்படி வதைப்பது தகுமா? இவர்கள்தான் அடுத்த தேர்தலில் ஓட்டு போடும் நிலைக்கு வருபவர்கள் அன்று இவற்றை நினைத்து பார்க்க மாட்டார்களா?.

* கடைசியாக எப்பொழுதுதான் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவீர்கள்? . சமச்சீர் கல்வி வருமா? வராதா?

2. விலைவாசி உயர்வு:  



               கடந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு தலை விரித்தாடியது என்றுதான் ஆட்சி மாற்றம் விரும்பினோம்.அதன் படியே ஆட்சி மாறியது விலைவாசி குறைந்ததா? இல்லையே...
 
          மத்திய அரசு வாகன எரி பொருட்களுக்கு விலை உயர்த்தியபோது தமிழக அரசு வரியை குறைத்து மக்கள் மனதில் கொஞ்சம் சந்தோசத்தை தந்தீர்கள்,ஆனால் அடுத்த இரண்டு வாரங்களிலேயே அனைத்திலும் வரியை உயர்த்தி சாபத்தை வாங்கி கொண்டீர்களே இது என்ன சாமர்த்தியம்?

                  மத்திய அரசு விலை உயர்த்திய போது கூப்பாடு போடும் நீங்கள், இங்கு வரிகளை உயர்த்தி கொள்வது எந்த விதத்தில் நியாயம் ? இதற்க்கு மட்டும் எப்படி மற்ற மாநிலங்களை காரணம் சொல்கிறீர்கள்.அடித்தட்டு மக்கள் அன்றாடம் படும் அவலம் உங்களுக்கு தெரிய வில்லையா?விலை ஏற்றுவதற்க்குத்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தினோமா?.கடந்த ஆட்சியில் 1 ரூபாய்க்கு அரிசி தந்து மற்றவை விலை அதிகமாயிருந்தது , இப்பொழுது இலவசமாக அரிசி தந்திருக்கிறீர்கள் மற்றவை அப்படியேதான் இருக்கிறது அல்லது அதிகரித்திருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்.என்ன மாற்றம் கொண்டு வந்திருக்கிறீர்கள்,3 மாதத்திற்குள் எப்படி முடியும் என்று கேட்பவர்களுக்கு... 3 மாதத்திற்க்குள் பழைய அரசின் திட்டங்களை இவ்வளவு எதிர்க்க முனைந்த நேரங்களை இதில் கொஞ்சம் செலவிட்டிருக்கலாமே...

3. மின்சார பிரச்சனை:



சமீபத்தில் என் அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி:

 தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை  

2007 - 86
2008 - 75
2009  - 15
2010 - 5
2011 - ௦௦௦௦௦0

  - ‍‍கொய்யால மின்சாரம் இருந்தாதானடா சாவீங்க... 
                                 இது நகைச்சுவைக்காக அனுப்படிருந்தாலும் அதில் உள்ள செய்தியை நம்மால் மறுக்க இயலாது.சமீபகாலமாக எப்பொழுது மின்சாரம் போகிறது எப்பொழுது மின்சாரம் வருகிறது என்றே தெரியவில்லை.கடந்த ஆட்சியிலாவது அறிவித்து விட்டு மிசாரத்தை தடை செய்வார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் எப்பொழுது மின்சாரம் தடைசெய்வார்கள் எவ்வளவு நேரம் மின்சாரம் போகும் என்பதே தெரியவில்லை.(தூக்கம் கெட்டு கண்விழித்த போது யோசித்தவைதான் இவையெல்லாம்). மின்சார உற்பத்திக்காக சில நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதை பாராட்டலாம் அனால் அவர்கள் செய்த அதே தவற்றை செய்வதன் மூலம் வெறுப்பை சம்பாதிக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 


4. பேருந்து கட்டணம் மற்றும் அரசு மதுபான வியாபாரம்:





                  போன ஆட்சியில் கலர் கலராய் பேருந்து இயக்கி மக்களை வாட்டி வதைக்கிறார்கள் என்று கூறித்தான் ஓட்டு கேட்டு வந்தீர்கள்.நீங்கள் அதையே பின்பற்றுவது என்ன நியாயம் ? மக்கள் எப்படி போனாலும் பரவயில்லை வருமானம் வந்தால் போதுமா?.போன ஆட்சியில் காது கிழிய கத்திய கூட்டனி கட்சிகள் எங்கே? என்ன செய்கிறார்கள் எதிர்கட்சியினர்?.சொகுசு பேருந்து என்ற பெயரில் ஏன் இவ்வளவு கட்டணகொள்ளை. சாதரன பேருந்துகளுக்கும் சொகுசு பேருந்துகளுக்கும் இடையே என்ன வித்தியாசம் வைத்திருக்கிறீர்கள் (தானியங்கி கதவு தவிற).எதற்க்காக போக்குவரத்து மிகுந்த காலை,மாலை நேரங்களில் சொகுசு பேருந்து மட்டுமே இயக்குகிறீர்கள். குறைந்த பட்சம் சாதரன பெருந்துகளை மட்டும் அதிகரிப்பதற்க்கும் ,வேலை நேரங்களில் சொகுசு பேருந்துகளை மட்டும் இயக்கும் பழக்கத்தினை மாற்றி சாதாரன பேருந்துகளையும் இயக்க ஆவன செய்யுமா இந்த‌ அரசு?.

                          நீங்கள் உருவாக்கிய வருமான கூடம் அரசு மதுபான வியாபாரம், நன்றாக பயன்படுத்தியவர்கள் போன ஆட்சியாளர்கள். ஆனால் அதில் வேலை செய்யும் படித்த இளைஞர் கூட்டம் என்ன பாவம் செய்தார்கள்,அவர்களின் பணி என்று நிரந்தரம் செய்யப்படும்,இதை நம்பி வேறு வேலையில்லாமல் இருக்கும் அவர்களுக்கு என்ன செய்தி சொல்லபோகிறீர்கள்?

5. ஈழம் மற்றும் கச்சதீவு பிரச்சனைகள்:


                  இந்த இரண்டு விசயத்திலும் நீங்கள் எடுத்த முடிவுகளை மனதார பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இத்தோடு நின்று விடாமல் மெலும் பல அழுத்தங்களை சர்வதேச நாடுகளுக்கும், மத்திய அரசுக்கும் கொடுக்க வேண்டுகிறோம். கச்ச தீவை பெறவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து ஒரு போதும் பின்வாங்காதீர்கள்
                      இலங்கை பொருள்களுக்கு தடை விதித்துள்ளது உண்மையில் அமலில் உள்ளதா? எனக்கு தெரிந்த சில இடங்களில் இலங்கை தயாரிப்புகள் விற்பனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக இந்திய தொழில்நுட்ப கழக வளாகம்(ஐ.ஐ.டி) போன்றவற்றில் தாராளமாக இலங்கை தயாரிப்புகள் கிடைக்கின்றன. எனக்கு தெரிந்த நண்பர்களிடமும் எடுத்து கூறி அவற்றை வாங்காமல் தவிர்க்கிறோம் மற்றவர்களை எப்படி தடுப்பது?. எப்படி இவற்றை கண்காணிக்க போகிறீர்கள், பெயரளவில் மட்டும் தீர்மானம் கொண்டு வருவது தேவை இல்லாதது அவற்றை எப்படி செயல் படுத்த போகிறோம்.


6. போக்குவரத்து நெரிசல்:

                         சென்னையின் இருக்கும் பெரிய பிரச்சனை போக்குவரத்து பிரச்சனை. நடந்து போய்விடலாம் என்று என்னும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தால் இதற்க்கான பிரச்சனை ஓரளவு முடியும் என நினைத்திருந்த மக்களின் நம்பிக்கையில் ஒரு கல் எறிந்து விட்டீர்கள். மெட்ரோ ரயிலுக்கு பதிலாக மோனொ ரயில் இயக்கப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அந்த திட்டம் எவ்வளவு காலம் இழுக்கும் இன்னும் எவ்வளவு காலங்கள் நாங்கள் இந்த போக்குவரத்து பிரச்சனையை சமாளிப்பது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை என்ன செய்ய போகிறீர்கள்? அந்த திட்டம் முடிந்து அதற்கான தடுப்புகளை என்று எடுபீர்களோ அன்றுதான் கொஞ்சமாவது போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வுகாண‌ முடியும். இந்த திட்டங்களுக்கு ஒரு தீர்வு காண முன்வருமா அரசு? 

7. நில அபகரிப்பு பிரச்சனை :

                  இது கண்டிப்பாக வரவேற்க பட வேண்டிய ஒன்று.ஆனால் இதிலும் சில திருத்தங்கள் வேண்டும் பலிவாங்கும் நோக்கோடு ஒரு சாராரை மட்டும் கைது செய்வது தவிர்க்க படவேண்டும். தவறு யார் செய்திருந்தாலும் அது ஆளுங்கட்சி, முன்னால் ஆண்ட கட்சி என்ற பேதமின்றி நடவடிக்கைகள் வேண்டும். நிறைய அரசியல்வாதிகள் தான் ஒரு கட்சி, தன் மகன் ஒரு கட்சி, தன் மைத்துனர் ஒரு கட்சி என குடும்பங்கள் அனைத்தும் அனைத்து கட்சிகளிடமும் தொடர்புகளை வைத்துள்ளனர். இவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் கண்டு பிடித்து கட்சி பாகுபாடின்றி செயல் படவேண்டும். ஏழை மக்களின் ரத்தங்களை உறிஞ்சியவர்களை சட்டதின் முன் சரியான தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் இதை சாதகமாக பயன்படுத்திகொண்டு பலிவாங்கும் நோக்கோடு செயல்படும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் வேண்டும், இல்லையென்றால் இந்த நடவடிக்கைகள் பலிவாங்கும் நடவடிக்கையாகவே மாறிப்போகும்.      
                                  
                         இவ்வளவு முக்கிய பிரச்சனைகளையும் இன்னும் பல பிரச்சனைகளையும் ஆராய்ந்து மக்களை முன்வைத்து தீர்த்து வைத்தால் தான் நம்பிக்கையுடன் ஓட்டு போட்ட மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை வரும். முந்தைய அரசு செயல்படுத்தியது என்ற ஒன்றிற்காக எல்லா திட்டங்களையும் குழிதோண்டி புதைக்க நினைத்தாலோ, மக்கள் துன்பம் அனுபவிக்கும் செயல்களில் இறங்கினாலோ பாதிப்பு உங்களுக்குதான் ஏனென்றால் மக்கள் இப்பொழுது புத்திசாலிகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஒன்று அவர்கள் அடுத்த தீர்ப்பு சொல்வதற்க்கு நான்கு வருடங்கள் ஆகும்.

Wednesday, July 6, 2011

பணம் பறிக்கும் இந்திய ஏழைகள்

               இந்திய தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி உலகத்திலேயே மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அறிவியல் துறையின் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது அதே சமயம் அந்த தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி எந்த அளவு பாமர மக்களை வளர்சிப்பாதைக்கு அழைத்து செல்கின்றது என்பதும் முக்கியம். அவை வளர்ச்சியைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றதா? இல்லை பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றதா?

வளர்ச்சி யாருக்கு..? பாதிப்பு யாருக்கு..?

        தொலைத் தொடர்புதுறை தொழிலில் லாபம் அடையாத நிறுவனங்களே கிடையாது அந்த‌ அளவுக்கு அவர்களின் வியாபார யுக்திகளும் , கவர்ச்சி அறிவிப்புகளையும் நாளுக்கு ஒன்றாய் அறிவித்து மக்களை முட்டாளாக்குதிலும் முன்னனியில் திகழ்கின்றனர். அந்த அறிவிப்பிலும், கவர்ச்சியிலும் மயங்கி எழ முடியாமல் திக்கி தவிப்பது மக்கள்தான். மக்களை இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம் ஒருசாரார் நன்கு சம்பாதித்து பொழுது போக்காய் செலவு செய்யும் மக்கள், அவர்களுக்கு இந்த பிரச்சனை ஒரு பொருட்டே கிடையாது, தெரியாமல் சாலையின் எல்லைக் கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தி விட்டு போக்குவரத்து காவல்துறையிடம் 100 அல்லது 200 ஐ கொடுத்து விட்டு சென்று கொண்டிருக்கும் மக்கள் அவர்கள்(எதிர் கேள்வி எதுவும் கேட்கமாட்டார்கள்). தேவைக்கும் அவசரத்திற்க்காகவும் மட்டுமே பார்த்து பார்த்து செலவு செய்யும் ஒரு சாரார்,அதே காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட பின்னும் கெஞ்சி ,மண்ணிப்பு கேட்டு எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து பணம் கொடுத்து மனசு நோகும் ஒரு சாரார்.

        இந்த இரண்டாம் வகையினர்களை பற்றி கண்டிப்பாக பேசியாக வேண்டும்.சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன் ஒரு உறவின் முறை (அவர் ஒரு கூலி தொழிலாழி) தனது அலைபேசியை எடுத்துகொண்டு என்னிடம் வந்தார்.

             "அப்பு நல்லா இருக்குறீங்களா? என்னானு தெரியல நான் எப்போ காசு போட்டாலும் எடுத்துகிறானுக என்னானு பாருங்கப்பு.."
 

                      என்று தனது அலைபேசியை கொடுத்தார்.அவர் அதை வைத்திருப்பதிற்க்கு காரணம் தனது மகள் வெளியூரில் படிக்கிறார் அவருடனான தொடர்புக்காக மட்டுமே அதை வைத்திருக்கிறார். நான் பார்த்தில் அவருக்கு தின ராசி பலன்(daily horoscope) மற்றும் மட்டை பந்து  சேவை(cricket update) என்ற இரண்டு சேவைகள் செயல்படுத்தப் பட்டிருந்தது. நான் வாடிக்கையாளர் செவை மையத்திற்க்கு பேசி அந்த செவைகளை நிறுத்தச் சொல்லி அவரிடம் அலைபேசியை கொடுத்து விட்டு வந்தேன்.

        இப்பொழுது சொல்லுங்கள் நம்மையும் அறியாமல் நம்மிடம் பணம் பறிப்பவர்களுக்கு என்ன பெயர்?. பல சமயம் அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியை படித்தாலே சில சேவைகள் செயல்பட்டு விடுகின்றது. ஒன்றும் தெரியாதவர்கள் என்ன செய்வது பணத்தை இழந்து நிற்பதுதான் மிச்சம். நுகர்வோர் மையத்தையோ நீதிமன்றத்தையோ அனுகலாமே என்று கூறும் அறிவு ஜீவிகளே இன்றைய சூழலில் நன்கு படித்து எல்லாம் தெரிந்தவர்களே நீதிமன்றம் , நுகர்வோர் மையம் என்று அழைவதற்க்கு முடியாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு செல்லும் போது பாமர மக்கள், ஏழைகள் என்ன செய்து விட முடியும்.

        அவர்களை தொடர்பு கொள்ளும் முன் இந்த பொத்தானை அழுத்து அந்த எண்ணை அழுத்து என்று படாத பாடு படுத்தி விடுவார்கள்,அதற்க்குள் நமது பொறுமை எல்லாம் கரைந்து விடும்.அப்படி தொடர்பு கொண்ட பின்னும் அவர்கள் நம்மை காக்க வைக்கும் நேரம் இருக்கிறதே அதை சொல்லி மாளாது.... 

           அலைபேசி வாடிக்கையாளர் மையம் எதற்க்கு என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.எத்தனை பிரச்சனைகளை அவர்கள் தீர்த்து வைத்திருப்பார்கள்? உண்மையாகவே இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை தெரியாதா? தெரிந்தும் ஏன் மறைக்கிறார்கள்? அவர்கள் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் 

"வணக்கம் தங்களுக்கு என்ன பிரச்சனை தெரிந்து கொள்ளாமா?" 
"காத்திருந்தமைக்கு நன்றி"
"விரைவில் சரி பார்க்கிறோம் சேவை மையத்தை அனுகியதற்க்கு நன்றி". 

இவைதான் பெரும்பாலும் கேட்க கூடிய பதில்.இதை சொல்வதற்க்கு எதற்க்கு அவர்கள்.இந்த லட்சனத்தில் அதை பதிவு வேறு செய்து கொள்கிறார்கள்.பதிவு செய்வதை ஒரு முறையாவது கேட்டிருப்பார்களா அதன் மேளாளர்கள்? பின்பு அப்படி இத்தனை பிரச்சனைகள். யாராவது சொல்லுங்கள் நீங்கள் வாங்கியதில் இருந்து உங்கள் அலைபேசி சேவையில் எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லையா?.

        குறைந்த பட்சம் ஒவ்வொரு நிறுவனமும் 10 கோடி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும்.ஒவ்வொருத்தருக்கும் குறைந்த பட்சம் 1 ரூபாய் மோசடி செய்வதாக கணக்கிட்டால் கூட‌ 10 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்,இவை குறைந்த பட்சம் அதிகபட்சம் எவ்வளவோ யாருக்கும் தெரியாது.இந்த நிறுவன தலைவர்கள்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் தங்களது வேலைகளை காட்டி பல கோடிகளை சுருட்டி இருக்கிறார்கள் ஆக நாட்டையும்,நாட்டு மக்களையும் சுரண்டி கொலுத்து பெருகும் இவர்கள் பணக்காரர்கள்... ஆனால் இந்தியா ஏழைகள் நிறைந்த‌ நாடு.

        குறைந்த பட்ச சமுதாய நோக்கம் கூட இல்லாமல் அப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள் இவர்கள்?. இப்பொழுதே பல பறவைகளை (எ.கா:சிட்டுகுருவி,செண்பகம் மற்றும் குயில்) காண முடிவதில்லை, பலருக்கு கதிர்வீச்சு பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவுகின்றது. எல்லாம் அலைபேசி கோபுரங்களின் அன்பளிப்பு. இவற்றையெல்லாம் முறைபடுத்தி சில இடங்களில் மட்டும் வைக்கலாமே ஏன் கண்ட இடங்களில் வைத்து பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். இயற்க்கையை ஏன் உதாசீன படுத்துகிறார்கள். சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பது போதாமல் ஏன் மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறார்கள். இந்த பணக்கார‌ ஏழைகள் எவ்வளவு நன்மைகள் இந்தியாவிற்காக செய்திருக்கிறார்கள்?

                    தொலைதொடர்பு துறையில் நன்மைகளே இல்லையா என்று கேட்க வேண்டாம். தீமைகளை களைய வேண்டும் என்பதே எண்ணம்.


        தனியார் மயம் என்ற போர்வைக்குள் என்று இந்தியா புகுந்ததோ அன்றிலிருந்தே போர்வைக்குள் நடக்கும் மர்மங்களும், கொள்ளைகளும் வெளித்தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. இந்த தனியார்மய வாதிகள் கடைசியில் பிடுங்குவது மக்களின் பணம். (இவர்கள்தான் இந்தியவின் பெரும்பணக்காரர்கள் ஆனால் இவர்கள் பிச்சைகாரர்கள், திருடர்களை விட கேவல
ம்). இந்த இந்தியாவின் நோய்களை, ஊழல் பெருச்சாலிகளை எப்படி புறக்கணிக்க போகிறோம்..? அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் நன்மைக்கு உட்பட்டு... யோசிப்போமா..?

Saturday, January 29, 2011

தயாராய் இரு என் தமிழினமே....



முப்ப‌து பேருந்து கொளுத்துவோம்
முழுவ‌தும் ஊர‌ட‌ங்கு செய்வோம்
அர‌சிய‌லுக்காய் அடித‌டி ப‌ண்ணுவோம் ஆனாலும்
அமைச்சர் பேர் சொல்லி அழ‌காய் த‌ப்பிப்போம்...

சொந்த நாட்டில் சுதந்திர கொடி ஏற்றா விட்டாலும்
அண்டை நாட்டு தேசத்திற்க்கு
அதிகாரம் கொடுப்போம் என்போம்

பாராளுமன்ற வளாகத்தில்
பத்து ரூபாய்க்கு உணவு கிடைக்கும்‍ இருந்தும்
ப‌த்தாது ச‌ம்ப‌ள‌ம் என‌
ப‌ல‌ம‌ட‌ங்கு உய‌ர்த்திக் கொள்வோம்...

பணம் பதுக்குவோம்
பட்டியல் இடமாட்டோம்
நிலம் அபகரிப்போம்
நேர்மை உள்ளவர் என்போம்...

ஏர் பிடிப்பவர் இறந்தாலென்ன‌
மீன் பிடிப்பவர் மறைந்தாலென்ன‌
இற‌ந்த‌வ‌ரின் கல்லறையில் கொடியேத்தி
ஏக‌போக‌அர‌சிய‌ல் செய்வோம்...

பாவ‌ப‌ட்ட‌ஜென்ம‌ங்க‌ள்
ப‌ட்டினியால் கிட‌ந்தாலென்ன‌
பாலும்,ப‌ல‌ச‌ர‌க்கும் விலையில்
ப‌ல‌ம‌ட‌ங்கு உய‌ர்ந்தாலென்ன‌...

எங்க‌ளை தேர்ந்தெடுக்க‌உங்க‌ளுக்கு
ஆயிர‌ம் ரூபாய் கொடுத்து
அடிமை ஆக்கிய‌ க‌தை தெரியாதோ...?

அறிவு ஜீவிக‌ள் யாரும்
வாக்கு ப‌திக்க‌வ‌ரமாட்டார் என்ற‌
அடிப்ப‌டைதான் எங்க‌ளுக்கு புரியாதோ...?

கொடிபிடிக்கும் என் தமிழினமே
கொண்டாட‌ த‌யாராய் இரு
ஆயிரம் ரூபாய் பணமும்
ஆட்டுக்கால் பிரியாணியும் தயார்
நாங்கள் வருகிறோம் உங்கள் வீட்டுக்கு
நீங்கள் தயாராய் இருங்கள் வாக்களிக்க...!!