Monday, January 26, 2009

இனியும் வேண்டாம்...

(குஜராத் பூகம்பத்திற்க்கு நினைவு அஞ்சலி)
(பரமக்குடி முகவைமுரசு வார இதழில் வெளிவந்த கவிதை - ஜனவரி 25 to 31,2002)

குடியரசு தினத்தில்
குதூகலம் கொண்ட மனங்களில்
கோரமான சோகம்...

கட்டிடங்கள் சிறு
கற்களான கொடுமை...
கொடியேற்றிய சிறார்கள்
கோரமான கொடுமை...
மக்கள் வசித்துவந்த புஜ்
மயானமான கொடுமை...
அழகாய் இருந்த குஜராத்
அழிந்த ஒரு கொடுமை...
அன்பிற்க்கினிய இந்தியா
அழுத ஒரு கொடுமை...

அழத்தான் செய்தோம்...!

தம்பியை தேடும்
சகோதரிகள் இருவர்
"சஞ்சீ" என்று அழுதபோது...

மடியினில் மகனை வைத்து
மாயமாய் தன் உயிர் போனபோதும்
மகனை காப்பாற்றிய - அந்த
மகர ஜோதியை நினைத்த போது...

குடிசைகள் எல்லாம்
அழிந்த பின்னும்
கை குழந்தையோடு - அந்த
கோரத்தை பார்த்து கொண்டிருந்த
சகோதரனை பார்த்தபோது...

பத்துமாடி பணக்காரன் நேற்று
பைசா இல்லை
பிச்சைக்காரன் இன்று
பசிக்கிறது சாப்பாடு கொடு - என்ற
பெரியவரை பார்த்தபோது...

ஆறுதல் பட்டோம்...!

மனித நேயத்துக்கு ஏதடா மதம் என
மக்களுக்கு இரத்தம் தந்த - அந்த
முஸ்லீம் சகோதரர்களை நினைத்தபோது...

மதமும் இல்லை...
ஜாதியும் இல்லை...
மாற்றம் இயற்க்கை கையில்
மாறிய மக்களை பார்த்தபோது...

புதையுண்டது புஜ் ஆனாலும்
இழந்தது எங்கள் தேசம் என
இந்தியாவே அழுது
ஆதரவு தந்தபோது...

இயற்க்கை தாயே...!
அழித்தது போதும்
ஆதரவு கொடு...!!
பூமியை சிதைத்தது போதும்
புன்னகைத்து முத்தம் கொடு...!!
இனியும் வேண்டாமே...
எங்களால் முடியாது
இன்னொரு துயரத்தை தாங்க...!!

புதியதாய் ஒரு பூமி வேண்டும்...!

என் ஈழத்து சகோதரன்
எழுந்து நடக்க
ஏகதிபத்திய சுதந்திரம் வேண்டும்....!

ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை
அறவே இல்லையெனும்
அண்மை தகவல்கள் வேண்டும்....!

பயங்கரவாதம் தெரியாத
பண்பட்ட நேசத்தை
பங்காளி தேசங்கள் பகிற வேண்டும்...!

சாதிமத சாக்கடைகள் நீங்கி
சமத்துவ ஆறு
சங்கமித்தல் வேண்டும்...!

குண்டுகள் தொடுக்கும்
கொடூரர்கள் மறைந்து
அன்பு தொடுக்கும் நண்பர்கள் வேண்டும்....!

உலக கணினி செய்வோரையும்
உண்ண கழனி செய்வோரையும்
ஒரே சமராக பாவிக்க வேண்டும்...!

பணங்களுக்காக வாழும்
பச்சோந்தி மனிதர்கள் மாறி - நல்
மனங்களுக்காக வாழ வேண்டும்...!

பூலோகம் தழைத்தோங்க - இந்த
புயலான மாற்றங்கள் கொண்ட
புதியதாய் ஒரு பூமி வேண்டும்...!

சந்தோசம்...!

சந்தோசம்...
ஒவ்வொரு மனிதனும்
வேண்டுவது... விரும்புவது...

பிறருக்கு கிடைக்கும் சந்தோசத்தை
தடுப்பது சந்தோசமல்ல...
சந்தோசம்...
மனதின் கரியம்...

நாமெல்லாம்...
ஆசைபடுவதையும்
ஆசை படுகிற விஷயம்
அடைவதை சந்தோசம் என்கிறோம்...

சந்தோசம் என்பது
குதூகலம்..
குதூகலம் என்பது
மனமலர்ச்சி
மனமலர்ச்சி என்பது
கள்ளமில்லா சிந்தனை
கள்ளமில்லா சிந்தனை என்பது
பிறரை நேசித்தல்
பிறரை நேசித்தல் என்பது
மனம்விட்டு பேசுதல்...

சந்தோசம் என்பது அன்புசெய்தல்
சந்தோசம் என்பது பகிர்ந்து கொள்ளுதல்
அன்பு என்பது அமுத சுரபி
அமுதசுரபி அள்ள அள்ள குறையாது...

அன்பு...
காசு பணம் கொடுத்தால் குறையும்
ஆனால்
காணமுடியாத அன்பை கொடுத்தால்
குறையாது..
பத்தாய் திரும்பி வரும்...!

அன்பு
அன்பின் உறவு
இதயத்தின் வரவு
அன்பு பாலைவனம் ஆகாது
அது எப்போதும் பூக்கும் சோலைவனம்
அதில்
மகிழ்ச்சி தேன் உண்ண
மனிதவண்டுகள் வந்துகொண்டே இருக்கும்...
வாழ்க்கை சிறக்கும்
வசந்தம் பிறக்கும்...!