Wednesday, July 6, 2011

பணம் பறிக்கும் இந்திய ஏழைகள்

               இந்திய தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி உலகத்திலேயே மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அறிவியல் துறையின் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது அதே சமயம் அந்த தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி எந்த அளவு பாமர மக்களை வளர்சிப்பாதைக்கு அழைத்து செல்கின்றது என்பதும் முக்கியம். அவை வளர்ச்சியைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றதா? இல்லை பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றதா?

வளர்ச்சி யாருக்கு..? பாதிப்பு யாருக்கு..?

        தொலைத் தொடர்புதுறை தொழிலில் லாபம் அடையாத நிறுவனங்களே கிடையாது அந்த‌ அளவுக்கு அவர்களின் வியாபார யுக்திகளும் , கவர்ச்சி அறிவிப்புகளையும் நாளுக்கு ஒன்றாய் அறிவித்து மக்களை முட்டாளாக்குதிலும் முன்னனியில் திகழ்கின்றனர். அந்த அறிவிப்பிலும், கவர்ச்சியிலும் மயங்கி எழ முடியாமல் திக்கி தவிப்பது மக்கள்தான். மக்களை இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம் ஒருசாரார் நன்கு சம்பாதித்து பொழுது போக்காய் செலவு செய்யும் மக்கள், அவர்களுக்கு இந்த பிரச்சனை ஒரு பொருட்டே கிடையாது, தெரியாமல் சாலையின் எல்லைக் கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தி விட்டு போக்குவரத்து காவல்துறையிடம் 100 அல்லது 200 ஐ கொடுத்து விட்டு சென்று கொண்டிருக்கும் மக்கள் அவர்கள்(எதிர் கேள்வி எதுவும் கேட்கமாட்டார்கள்). தேவைக்கும் அவசரத்திற்க்காகவும் மட்டுமே பார்த்து பார்த்து செலவு செய்யும் ஒரு சாரார்,அதே காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட பின்னும் கெஞ்சி ,மண்ணிப்பு கேட்டு எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து பணம் கொடுத்து மனசு நோகும் ஒரு சாரார்.

        இந்த இரண்டாம் வகையினர்களை பற்றி கண்டிப்பாக பேசியாக வேண்டும்.சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன் ஒரு உறவின் முறை (அவர் ஒரு கூலி தொழிலாழி) தனது அலைபேசியை எடுத்துகொண்டு என்னிடம் வந்தார்.

             "அப்பு நல்லா இருக்குறீங்களா? என்னானு தெரியல நான் எப்போ காசு போட்டாலும் எடுத்துகிறானுக என்னானு பாருங்கப்பு.."
 

                      என்று தனது அலைபேசியை கொடுத்தார்.அவர் அதை வைத்திருப்பதிற்க்கு காரணம் தனது மகள் வெளியூரில் படிக்கிறார் அவருடனான தொடர்புக்காக மட்டுமே அதை வைத்திருக்கிறார். நான் பார்த்தில் அவருக்கு தின ராசி பலன்(daily horoscope) மற்றும் மட்டை பந்து  சேவை(cricket update) என்ற இரண்டு சேவைகள் செயல்படுத்தப் பட்டிருந்தது. நான் வாடிக்கையாளர் செவை மையத்திற்க்கு பேசி அந்த செவைகளை நிறுத்தச் சொல்லி அவரிடம் அலைபேசியை கொடுத்து விட்டு வந்தேன்.

        இப்பொழுது சொல்லுங்கள் நம்மையும் அறியாமல் நம்மிடம் பணம் பறிப்பவர்களுக்கு என்ன பெயர்?. பல சமயம் அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியை படித்தாலே சில சேவைகள் செயல்பட்டு விடுகின்றது. ஒன்றும் தெரியாதவர்கள் என்ன செய்வது பணத்தை இழந்து நிற்பதுதான் மிச்சம். நுகர்வோர் மையத்தையோ நீதிமன்றத்தையோ அனுகலாமே என்று கூறும் அறிவு ஜீவிகளே இன்றைய சூழலில் நன்கு படித்து எல்லாம் தெரிந்தவர்களே நீதிமன்றம் , நுகர்வோர் மையம் என்று அழைவதற்க்கு முடியாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு செல்லும் போது பாமர மக்கள், ஏழைகள் என்ன செய்து விட முடியும்.

        அவர்களை தொடர்பு கொள்ளும் முன் இந்த பொத்தானை அழுத்து அந்த எண்ணை அழுத்து என்று படாத பாடு படுத்தி விடுவார்கள்,அதற்க்குள் நமது பொறுமை எல்லாம் கரைந்து விடும்.அப்படி தொடர்பு கொண்ட பின்னும் அவர்கள் நம்மை காக்க வைக்கும் நேரம் இருக்கிறதே அதை சொல்லி மாளாது.... 

           அலைபேசி வாடிக்கையாளர் மையம் எதற்க்கு என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.எத்தனை பிரச்சனைகளை அவர்கள் தீர்த்து வைத்திருப்பார்கள்? உண்மையாகவே இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை தெரியாதா? தெரிந்தும் ஏன் மறைக்கிறார்கள்? அவர்கள் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் 

"வணக்கம் தங்களுக்கு என்ன பிரச்சனை தெரிந்து கொள்ளாமா?" 
"காத்திருந்தமைக்கு நன்றி"
"விரைவில் சரி பார்க்கிறோம் சேவை மையத்தை அனுகியதற்க்கு நன்றி". 

இவைதான் பெரும்பாலும் கேட்க கூடிய பதில்.இதை சொல்வதற்க்கு எதற்க்கு அவர்கள்.இந்த லட்சனத்தில் அதை பதிவு வேறு செய்து கொள்கிறார்கள்.பதிவு செய்வதை ஒரு முறையாவது கேட்டிருப்பார்களா அதன் மேளாளர்கள்? பின்பு அப்படி இத்தனை பிரச்சனைகள். யாராவது சொல்லுங்கள் நீங்கள் வாங்கியதில் இருந்து உங்கள் அலைபேசி சேவையில் எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லையா?.

        குறைந்த பட்சம் ஒவ்வொரு நிறுவனமும் 10 கோடி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும்.ஒவ்வொருத்தருக்கும் குறைந்த பட்சம் 1 ரூபாய் மோசடி செய்வதாக கணக்கிட்டால் கூட‌ 10 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்,இவை குறைந்த பட்சம் அதிகபட்சம் எவ்வளவோ யாருக்கும் தெரியாது.இந்த நிறுவன தலைவர்கள்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் தங்களது வேலைகளை காட்டி பல கோடிகளை சுருட்டி இருக்கிறார்கள் ஆக நாட்டையும்,நாட்டு மக்களையும் சுரண்டி கொலுத்து பெருகும் இவர்கள் பணக்காரர்கள்... ஆனால் இந்தியா ஏழைகள் நிறைந்த‌ நாடு.

        குறைந்த பட்ச சமுதாய நோக்கம் கூட இல்லாமல் அப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள் இவர்கள்?. இப்பொழுதே பல பறவைகளை (எ.கா:சிட்டுகுருவி,செண்பகம் மற்றும் குயில்) காண முடிவதில்லை, பலருக்கு கதிர்வீச்சு பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவுகின்றது. எல்லாம் அலைபேசி கோபுரங்களின் அன்பளிப்பு. இவற்றையெல்லாம் முறைபடுத்தி சில இடங்களில் மட்டும் வைக்கலாமே ஏன் கண்ட இடங்களில் வைத்து பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். இயற்க்கையை ஏன் உதாசீன படுத்துகிறார்கள். சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பது போதாமல் ஏன் மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறார்கள். இந்த பணக்கார‌ ஏழைகள் எவ்வளவு நன்மைகள் இந்தியாவிற்காக செய்திருக்கிறார்கள்?

                    தொலைதொடர்பு துறையில் நன்மைகளே இல்லையா என்று கேட்க வேண்டாம். தீமைகளை களைய வேண்டும் என்பதே எண்ணம்.


        தனியார் மயம் என்ற போர்வைக்குள் என்று இந்தியா புகுந்ததோ அன்றிலிருந்தே போர்வைக்குள் நடக்கும் மர்மங்களும், கொள்ளைகளும் வெளித்தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. இந்த தனியார்மய வாதிகள் கடைசியில் பிடுங்குவது மக்களின் பணம். (இவர்கள்தான் இந்தியவின் பெரும்பணக்காரர்கள் ஆனால் இவர்கள் பிச்சைகாரர்கள், திருடர்களை விட கேவல
ம்). இந்த இந்தியாவின் நோய்களை, ஊழல் பெருச்சாலிகளை எப்படி புறக்கணிக்க போகிறோம்..? அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் நன்மைக்கு உட்பட்டு... யோசிப்போமா..?

Saturday, January 29, 2011

தயாராய் இரு என் தமிழினமே....



முப்ப‌து பேருந்து கொளுத்துவோம்
முழுவ‌தும் ஊர‌ட‌ங்கு செய்வோம்
அர‌சிய‌லுக்காய் அடித‌டி ப‌ண்ணுவோம் ஆனாலும்
அமைச்சர் பேர் சொல்லி அழ‌காய் த‌ப்பிப்போம்...

சொந்த நாட்டில் சுதந்திர கொடி ஏற்றா விட்டாலும்
அண்டை நாட்டு தேசத்திற்க்கு
அதிகாரம் கொடுப்போம் என்போம்

பாராளுமன்ற வளாகத்தில்
பத்து ரூபாய்க்கு உணவு கிடைக்கும்‍ இருந்தும்
ப‌த்தாது ச‌ம்ப‌ள‌ம் என‌
ப‌ல‌ம‌ட‌ங்கு உய‌ர்த்திக் கொள்வோம்...

பணம் பதுக்குவோம்
பட்டியல் இடமாட்டோம்
நிலம் அபகரிப்போம்
நேர்மை உள்ளவர் என்போம்...

ஏர் பிடிப்பவர் இறந்தாலென்ன‌
மீன் பிடிப்பவர் மறைந்தாலென்ன‌
இற‌ந்த‌வ‌ரின் கல்லறையில் கொடியேத்தி
ஏக‌போக‌அர‌சிய‌ல் செய்வோம்...

பாவ‌ப‌ட்ட‌ஜென்ம‌ங்க‌ள்
ப‌ட்டினியால் கிட‌ந்தாலென்ன‌
பாலும்,ப‌ல‌ச‌ர‌க்கும் விலையில்
ப‌ல‌ம‌ட‌ங்கு உய‌ர்ந்தாலென்ன‌...

எங்க‌ளை தேர்ந்தெடுக்க‌உங்க‌ளுக்கு
ஆயிர‌ம் ரூபாய் கொடுத்து
அடிமை ஆக்கிய‌ க‌தை தெரியாதோ...?

அறிவு ஜீவிக‌ள் யாரும்
வாக்கு ப‌திக்க‌வ‌ரமாட்டார் என்ற‌
அடிப்ப‌டைதான் எங்க‌ளுக்கு புரியாதோ...?

கொடிபிடிக்கும் என் தமிழினமே
கொண்டாட‌ த‌யாராய் இரு
ஆயிரம் ரூபாய் பணமும்
ஆட்டுக்கால் பிரியாணியும் தயார்
நாங்கள் வருகிறோம் உங்கள் வீட்டுக்கு
நீங்கள் தயாராய் இருங்கள் வாக்களிக்க...!!

Friday, November 26, 2010

வீரவணக்கம் ....!

26/11 மும்பை தாக்குத‌ல்

வருடங்கள் இர‌ண்டு நகர்ந்தது
வாழ்க்கையும் நகர்கின்றது
நீங்கள் விட்டு சென்ற
தடயங்கள்...தாகங்கள்...
இன்னும்...இன்னும்...என்றும்
நகர்வதில்லை தோழர்களே....

கொடுத்தீர்க‌ள் உயிரை எங்க‌ளுக்காக‌ - வ‌ந்த‌
கொடுங்கோல‌ன் இன்னும் இருக்கையிலே...
த‌டுத்தீர்க‌ள் பாதிப்பை நாட்டுக்காக‌
த‌ர‌மில்லா ம‌னித‌ர்க‌ளின் மூர்க்க‌த்தினாலே‌...

இழ‌ப்புக‌ளை எங்க‌ள் ப‌க்க‌ம் வைத்துக்கொண்டு
எதிரிக்கு இர‌ண்டு கோடிக‌ளை செல‌வ‌லிக்கிறோம்
புரட்சிகர மாவீரர் உங்க‌ளுக்கு
புண்ணிய‌மாய் என்ன‌ செய்தோம்...?

த‌ழும்புகளை த‌ங்க‌மாக‌ ஏந்திக்கொண்டு
விளிம்புக‌ளில் வீர‌ம‌ர‌ண‌ம் அடைந்தோரே...
நினைவுக‌ளில்... நேச‌ங்க‌ளில்... என்றும்...
எம்மை விட்டு எங்கும் நீங்க‌மாட்டீர் தோழ‌ர்க‌ளே...!

க‌ர்க‌ரே..காம்தே...கம்ப்ளே..சலாஸ்கர்...சந்தீப் - என‌
க‌ள‌ப்ப‌ட்டிய‌ல் நீண்டு இருக்கிற‌து...
காவிய நாய‌க‌ர்களே உங்க‌ள் நினைவுக‌ள்
க‌ண்ணீராய் எங்க‌ளோடு க‌ல‌ந்தும் இருக்கிற‌து...!

உயிரின் சுவாசத்தை நாட்டிற்காய்
ஒப்புவித்து கொடுத்தோரே - உங்களுக்காய்
உண்ர்வுகள் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் சொல்லுகிறோம்
உளமார்ந்த வீரவணக்கம்...!!

Monday, November 15, 2010

குடிமகனார்கள் ஜாக்கிரதை.....!

எழுதனும்னு நினைக்கும் போது நேரமில்லமை அது இதுனு ஏதவது ஒரு காரணத்தினாலே முடியாம போயிடுது சரி எழுதுவோம் எதையவதுனு கணினி முன்னால அமர்ந்தேன் என்ன எழுதலாம்னு நெனைக்கிறப்போ படிச்ச செய்தியும் நேத்து பாத்த இடமும் நினைவுக்கு வர இத எழுத ஆரம்பிச்சாச்சு.....

படித்த‌செய்தி :தீபாவளிக்கு "மதுபான‌கடை"யில் பயங்கர கூட்டம்: ரூ.300 கோடிக்கு மேல் சரக்கு விற்பனை

பார்த்த காட்சி :ஒரு "மதுபான‌கடை" பக்கத்தில் கழிப்பறை கட்டிடம் இல்லாத கழிபறையில் புரண்டு கிடந்த குடிமகனார்.

எதுவுமே ஒரு அளவுக்கு மேல போனா நமக்கு போதை அதிகம் ஆயிடுறது சகசம்தான் ஆனால் போதையே அளவுக்கு அதிகமா போனால் என்ன செய்வது.மனிதன் நிலைகுலைந்து தன்னை மறந்து தரையை மெத்தையாவும் கழிவுகளை வாசனையாகவும் ஏத்துகிட்டு மூச்சு இருக்கா இல்லையானு தெரியாத அளவுக்கு கிடந்த நான்பார்த்த அந்த மனிதரை போல கிடக்க வேண்டியதுதான்.அப்படி என்னத்த நான் பாத்துட்டேனு கேள்வி கேக்குறீங்களா இதோ இதுதாங்க நடந்தது....

நான் தினமும் போய் வரும் வழியில் ஒரு மதுபான‌கடை(அங்க மட்டும்தான் இருக்கானு கேக்குறவுங்க மண்ணிச்சுகோங்க எங்கெங்கு இருக்கோ அங்கேயெல்லாம் அப்பிடிதான்னு நினைக்கிறேன்) தினம் நான் போகும்போது மூக்கை பிடிக்காம நடந்து போறதுங்கிறது அவ்வளவு எளிதான காரியம் இல்ல அந்தளவுக்கு நாற்றம்,யாராவது சரக்குதான் அந்த அளவுக்கு வீசுதுனு தப்பா நெனெச்சிடாதீங்க அது சரக்க அடிச்சுட்டு குடிமகனார்கள் விட்டு செல்லும் சரக்குகள்.எல்லா விற்பனை நிலையங்களுக்கு அருகிலேயும் இப்படிபட்ட திறந்தவெளி கழிப்பிடங்களை காண முடியும்.அப்படி பட்ட இடத்துல உச்சகட்ட உற்சாகத்தில ஒருத்தர் படுத்து உருண்டுவருகிறார் வேறென்ன சொல்ல.....

மூனு மணிநேரம் கடையில உக்காந்து மூச்சுமுட்ட குடிக்கிறது வெளில வந்ததும் வெளியெத்தி விட்டுறது,மூனு மணி நேரம் பொருத்த நீங்க கொஞ்சம் கழிப்பிடம் தேடிபோய் வெளியேற்றலாம் இல்லியா?.குடிமகனார் யாரையும் நான் குற்றம் சொல்றேன்னு தப்பா எடுத்துகாதீங்க ஏன் நான் சொல்றேனா நீங்களே உற்ச்சாக மிகுதியில அதில உருண்டு புரள வாய்ப்பிருக்குதில்லையா நான் பார்த்த அந்த நபரைபோல நீங்களும் ஒருநாள்...(!) அதனால உங்க சுற்றத்தை நீங்கதான் சுத்தமா வெச்சிருக்கனும் முடிஞ்ச அளவு சுத்த‌மா வெச்சுகோங்க‌… இல்ல குறைந்த பட்சம் நீங்க‌சுத்த‌மெல்லாம் ப‌ன்னா‌விட்டாலும் அசுத்த‌ம் ப‌ன்னாம‌இருங்க‌ள்.நீங்க‌ளும் த‌ப்பிப்பீர்க‌ள் அடுத்த‌வ‌ர்க‌ளும் த‌ப்பிப்பார்க‌ள்.....

இப்போதெல்லாம் நம் மக்கள்,முக்கியமா நம்ம இளைஞர்கள் ரொம்பபப‌... முன்னேறிட்டாங்க ஒரு பொண்ணு பாத்துட்டா,பரீச்சையில தேர்ச்சி/தோல்வி அடைஞ்சா, உடம்புல அடிபட்டா ,சம்பளம் வந்தா,அலுவலகத்தில மேளாளர் பாராட்டினா/திட்டினா,காலைல சீக்கிறம் எழுந்தா,மூச்சா போகலைனா கூட... கொண்டாடனும்…... கொண்டாடனும்…...அதுதான் குறிக்கோள்….. அதுக்கு ஒரே ‘ம(வி)ருந்தா’ இதை எடுத்துக்கிறாங்க....

இப்பொதெல்லாம் எதுக்கெடுத்தாலும் ஒரு காரணம் சொல்லிட்டு குடிக்கிறது வழக்கமா போயிடுச்சு,குடிங்க அது உங்களோட சுதந்திரம்...விருப்பம்...அதுலயும் முக்கியமாக நாட்டோட வருமானத்துல உங்களோட பங்கு ரொம்பவும் முக்கியம் ஆகவே குடிமகனார்களே குடிங்க ஆனா யாருக்கும் பாதிப்பு வராம பாத்து குடிங்க(உங்களையும்தான் சேர்த்து சொல்றேன் உங்களுக்கும் பாதிப்பு வராம பாத்துக்கோங்க‌). உங்களுக்கு அறிவுறை சொல்ற அளவுக்கு நான் பெரியவன் இல்லை (மப்புல இருக்குற ஒருத்தரை அறிவுறை சொல்லிட்டு தப்பிச்சுட முடியுமா என்ன?)

இந்த விசயத்துல கிராமம்/நகரம் அப்படி எந்த பாகுபாடும் இல்லீங்க எல்லாருமே இப்பொ அதுக்கு அழையாத விருந்தாளியா இருக்கங்க.இப்போ எல்லாம் வீட்டுல நடக்கிற நல்ல ஒரு நிகழ்ச்சிக்கு போனாகூட அதுவும் ஒரு விருந்தா தனியா இருக்கு.இதற்கெனெ நிதிநிலை அறிக்கை கூட தாயரிக்கிறாங்க எல்லா செலவோடையும் இதுக்கும் தனியா ஒரு தொகை ஒதுக்கி விடுகிறார்கள்.யாராவது கலந்துக்காத ஆட்களையும் புடிச்சி தம்பி இது குளிர்பாணம் மாதிரிதான் தம்பி… ஒண்ணும் செய்யாது சும்மா சாப்பிடுங்கனு உசுப்பெத்தி விடுராங்க... ம்ம்ம் என்ன பன்றது காலம் 'குடி'காலம் ஆயிபோச்சு....

இப்படித்தான் நான் தங்கி இருந்த அறை நண்பர்கள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கையில பையோடு வரும்போதெல்லாம் கொஞ்சம் பயமாகவே இருக்கும்.இவங்க காலைல முழிச்சு போற வரைக்கும் வாந்தி(இதுக்கு ஆப்‍‍பாயில் னு பேரு வேற‌) எடுக்காம இருக்கனுமே அப்படிங்கிற நினைப்புலேயே பாதி தூக்கம் போயிடும்.அவங்களுக்கு எதுவுமே தெரியற‌து இல்ல சுயநினைவு இருக்குற வரைக்கும் ஏதாவது ஒரு தலைப்பு எடுத்து பேசுறது(உண்மையிலேயெ ரொம்ப நல்லவங்களாக மாறிடறாங்க...).அதுவரைக்கும் சண்டை போட்டு பேசாதவன்கிட்ட கூட நீ என் நண்பேண்டா... னு வசனம் பேசுறது இப்படி பல நகைச்சுவைகள் நடக்கும்.கொஞ்சம் உச்சம் அடைஞ்ச உடனே ஒரு சின்ன சத்தம் கேக்கும் உவ்வேனு... பக்கத்துல இருக்கிறவன் எச்சரிக்கையா இருக்கனும் இல்லை அவ்ளோதான்.வேறென்ன அந்த இடமே நாறிபோயிடும் அதன்பிறகு அறையை சுத்தபடுத்துறதில இருந்து அவர்களை கழுவுறது வரைக்கும் தெளிவா இருக்குற யாரவதுதானே பண்ணனும் இப்போ புரியுதா ஏன் பயப்படனும்னு.

இதவிட ஒரு பெரிய நகைச்சுவை நடந்துச்சு,இப்ப்டித்தான் ஒருநாள் உச்சகட்ட உற்ச்சாகத்தில் உவ்வேவே போயிட்டு நல்லா அவன் தூங்கிட்டான் நாங்க எல்லா சேவைகளையும் செய்துட்டு தூங்க முடியாம நேரம் கழிச்சு தூங்கி எழறதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிட்டுது.அவன் எப்ப‌டியோ சீக்கிறமாகவே எழுந்துட்டான் எழுந்தவன் எல்லோரையும் எழுப்பி திட்டுனா திட்டு அவ்ளோ திட்டு திட்டுறான் என்ன காரணம்னு கேக்கலையே மக்கா..?

யாரோ வாந்தி எடுத்துட்டாங்களாம்... ஒரே வீச்சமா இருக்காம்...ஏண்டா குடிக்கிறவன் ஒழுங்கா குடிக்கிறதில்ல ஏண்டா இப்படி வாந்தி எடுத்து தொலைக்கிறீங்க னு கேள்வி வேற...(?!)

என்ன கொடுமை மக்கா..?

நீதாண்டா வாந்தி எடுதவன்னு சொன்னா அவன் நம்பவே இல்ல கடைசி வரைக்கும். எனக்கும் இதுவரைக்கும் நம்பவே முடியலைங்க அவன் உண்மையிலேயே பேசுனானா இல்ல தெரிஞ்சுதான் அப்பிடி பெசனும்னு பேசுனானா?

மப்பில்லாத நேரம் பாத்து பதில் சொல்லுங்க மக்கா.....:)

Friday, May 28, 2010

நீ வேண்டும்...!

நன்றி:வார்ப்பு

நீ வேண்டும்...!
---------------------


இரவு நேரத்து பவுர்ணமி போல்
இதய தேசத்தில் நுழைந்தவளே...

ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...

வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் என‌க்கு
வெளிச்ச புள்ளியாய் வ‌ந்த‌வ‌ளே.

குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவள வேண்டும்
உன் வாய் ஒழுகும் சிறு உண‌வெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...

இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.
என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!



குறையாத‌ நேசம்....
----------------------


கையளவு உணவைகூட‌
கைகள் ஒன்றுகூடி
களிப்போடு உண்டு முடித்து
பசியை
அன்பால் நிரப்பிக் கொள்ளும்
அற்புதம் நிறைந்ததுதான் நட்பு...

சில்லரைகள் பெருகிபோனதால்
சேர்த்து வைத்த‌ நேசங்கள்
சிதறுகின்ற போதும்
கல்லரை சேரும்வரை கூட‌
கைகோர்த்து வரும்
கள்ளமில்லா நேசம்தான் நட்பு....

இன்பத்தை இரட்டிப்பாக்குவதும்
இதயத்தை தித்திப்பாக்குவதும்
துன்பத்தை துடைத்து போடுவதும்
துயரங்களை சருகாக்குவதும்தான்
தூய்மை கொண்ட நட்பு...

தேவைகள் நிறைந்த‌
வியாபார உலகத்தில் புதியதாய் பல‌
பொய்கள் சொன்னாலும் - நட்பெனும்போது
உண்மையை மட்டுமே
உரக்கச் சொல்வது நட்பு...

காலங்களின் சூழ்ச்சியில்
கண்பார்க்க முடியாவிட்டாலும்
உறவுகளின் நேச‌ சுழ‌ற்ச்சியில்
உற‌வாட‌ முடியாம‌ல் போனாலும்
இதய க‌ருவ‌ரையில்‍ எப்போதுமே
இருக்கும் குழ‌ந்தைதான் ந‌ட்பு...

நேற்று இன்று நாளை என‌
நெடுந்தூரம் சென்றாலும்
காற்று வாங்கி களைத்திருக்கும்
கருமைமிகு வானம் க‌ளைந்தாலும்
சேர்த்து வைத்த‌ உற‌வுக‌ள்
சித‌றியே போனாலும் நமக்கு
குறையென்று தெரிந்தால்
கூடவே வரும் கோடி ந‌ட்புக‌ள்தான்
என்றுமே நமக்கு குறையாத நேசம்....!!

http://www.vaarppu.com/view/2062/

முடிந்துபோன பாதை

எமக்கு...
வலிமையான கால் இருக்கிறது
வழி செய்யும் தோள் இருக்கிறது
மீண்டும் புதியது படைப்போம்
மீள அதிலே நடப்போம்...!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=56

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி...

இது தொலைந்த ஒன்று இல்லை
என் செல்ல குட்டியின் காலில் இருந்து
தொலைக்கப் பட்டதாய் இருக்கும்

கிழிந்த ஒன்று வேண்டாம் என்று
எத்தனை முறைதான் சண்டையிடுவாள்
பாவம் அவள்
இந்தமுறை நான் கேட்கபோவதில்லை
புதிதாய் வாங்கி கொடுத்து
புன்னகை வாங்க போகிறேன்.....!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=55

Thursday, December 10, 2009

பாமரனின் வாழ்க்கை...!

எலும்பும் தோலுமாய்
ஏக்கர் கணக்கில் உழவுதரும்
எங்களில் ஒருவரான ஏர்மாட்டிற்க்கு
வைக்கோல் கொடுக்க முடியாமல்
வந்த விலைக்கு விற்ற
வாழா வெட்டிகள் நாங்கள்....

கடைசி விதை வரை
களம் கொழிக்கும் கனவோடு
மார் இறுக உழைத்து
பயிர் பெறுக மழை வேண்டி
வானம் பார்க்கும் பூமியை கொண்ட
வாடிக்கை மனிதர்கள் நாங்கள்...

சொகுசு ஊர்திகளையும்
குளிர்சாதன பேருந்துகளையும்
காட்சிபொருளாய் பார்த்து விட்டு
சாதாரன ஊர்திக்காய் மணிக்கணக்கில்
சத்தமில்லாது காத்திருக்கும்
சாமானிய சிறுகுடிகள் நாங்கள்...

சிறு மளிகை அங்காடியும்
தள்ளுவண்டி காய்கறி கடையும்
தாயாக சோறு தந்தநாள் மறந்து
அயல்நாட்டு மொத்த கடைகளுக்கு
அனைத்தயும் அடகுவத்து அடங்கிபோன
அப்பாவி ஜென்மங்கள் நாங்கள்....

உழைப்பதை எல்லாம் பெருமுதலாளிக்கு
உண்மையாய் கொடுத்து விட்டு
வயிற்று பசி போவதற்க்கு
ஒற்றை ரூபாய் அரிசிக்காய்
மடியேந்தி நிற்க்கும்
மதிகெட்ட‌ மகராசிகள் நாங்கள்...

வாழ்வாதாரம் ஒன்றுக்காய்
வலையெடுத்து கடலுக்குள் போக
வழிநெடுக துயரங்கள் சேர
மீன்பிடிப்பதை விடுத்து
உயிர் பிடித்து வீடு வரும்
உப்பு சப்பில்லாதவர்கள் நாங்கள்....

தினம் நான்கு தேனீரும்
தெருக்கடை பண்டங்களும்
தைரியமாய் வாங்கி உண்டுவர‌
திக்கு தெரியாத விலைவாசியில்
உணவுக்கே ஊர்சுற்றி வரும்
ஒன்றுமறியா காற்றாடிகள் நாங்கள்...

கோடிகளில் புரல்வோரும்
மாடிகளில் வாழ்வோரும்
ஜாதிகளில் திகல்வோரும்
ஆட்சியில் இருப்போரும்
பாதகமாய் வாழ்ந்து வரும் - இந்த‌
பாமரரை நினைப்பீரோ...?


இணையத்தில் வெளிவந்த கவிதை:
நன்றி http://www.tamilauthors.com/03/101.html

Tuesday, October 13, 2009

பிரிதலும்... புரிதலும்...

பொருளீட்டும் காரணமாய்
பருந்தையொத்த வாகணத்தில் நான்
பயணித்த காலங்களில்...

கல்யாணத்திற்க்கு காத்திருந்த
கனியமுது தங்கைகளும்
பொருள்களை சேர்த்திடாமல்
புண்ணியங்களை சேர்த்திருந்த பெற்றோரும்
புத்தியில் வந்துபோக...
புதுமகவை எதிர்நோக்கி காத்திருந்த
பூ உன் நினைவு நிறுத்தி
நெடுநேரம் நிலைகுத்தி நின்றேன்....

பாசி படர்ந்த ஒற்றை வயலில்
பாதம் பதித்து பழக்கப்பட்ட கால்கள்
பாலைவன மணலை தினம் தொட்டுபார்க்க
சூரியன் உச்சிமீது கனலை கொட்டிதீர்க்க
இப்படியாய்
நெருப்பொத்த தேசத்தில் எனக்கு வேலையாம்
நெஞ்சம் சோர்ந்து போகிறது தினம் கோழையாய்....

அங்கே
வெள்ளையும் கருப்புமாய் மனிதர்கள் - அவர்பிள்ளைக்கு
வேடிக்கை பொம்மையாய் எம்மேல் கொடுமைகள்
எள்ளுக்காய் அளவில் சிறு எறிகணைகள்
கொல்லுதல் இல்லாமல் முழங்கால் குறிபார்க்க
எதிர்த்து நியாயம் கேட்போர் எல்லோருக்கும்
ஏதிலி என்றோர் ஏளனமான பதில்இருக்கும்...

ஏறுபூட்டி உழுத நேரங்களில் அன்பே - உன்னோடு
இன்பமயமாய் கூடி வாழ்ந்து வந்தேன்
தார்கூட்டி எடுக்கும் இந்த தேசத்தில்
தாரகை உன்நினைவில் தவியாய் தவிக்கிறேன்
மாலைநேர சூரியன் மறைந்துஓட - உன்
மந்தகாச புன்னகை நினைவில் மயங்கிஇருக்க
தாணியங்கி இயந்திரமாய் களைப்பில் கண்சரிய
தவிப்பில்வந்த கண்ணீரை தலையணை அறியும்...

ஒலிவாங்கியில் உன்னோடு உலாவிய நேரத்தில்
உதடுஒட்டா முத்தம் ஒன்றை உலுப்பிவிட்டாய்
அது சொல்லிப்போனது
தள்ளிப்போகும் நாளுக்காய் தவிப்பதாய் - எனைவிட்டு
தனியாய் இருப்பதை தினம் வெறுப்பதாய்
அந்திசாய்ந்த விளக்கொளியில் அத்தனையையும் முறைப்பதாய்
அகல்விளக்கினை பார்த்து அர்த்தமற்று சிரிப்பதாய்....

என் கருவரையின் தோழிகளை
மணவறையில் பார்த்து விட்டேன் - காதல்
கண்மனியே வந்துவிட்டேன் கவலைபட்டினி தேயவேண்டாம்
இன்னொருமுறை நான் உன்னை பிரியமாட்டேன்
இந்த தேசத்தை விட்டு போகமாட்டேன்...

நோகாமல்பணம் கிடைக்குமென்று நூறுநாள்வேலை செய்யமாட்டேன்
நிறையபொருள் கிடைக்குமென்று நெடுந்தூரம் பிரியமாட்டேன்
சோம்பேறியாக்கும் கூட்டத்தில் இணையமாட்டேன் - உண்ண
சோறுபோடும் நம்நிலத்தில் உழைக்க தயங்கமாட்டேன்...!

நன்றி தமிழ்மன்றம்.காம்
தமிழ்மன்ற 18 வது கவிதை போட்டியில் இரண்டாம் இடம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21209