Tuesday, June 30, 2009

கருவறை தின்ற கரு.......

நன்றி தமிழ்மன்றம்:
தமிழ்மன்ற கவிதை போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை:


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20303

முலை பால் குடித்து
முன்னேற்றம் அடைந்தவன் - அவள்
தோல் சிறுத்து இருக்கும்போது
வாய்சோறு தரமறுக்கும் பிள்ளை... தாய்மை எனும்
கருவறை தின்ற கரு....!

பிச்சையாய் பெற்றேணும்
இச்சையை தீர்த்துக்கொண்டு
மிச்சத்தை தூக்கி எறியும்
காதலர்கள்... காதல் எனும்
கருவறை தின்ற கரு....!

குருவிகளையும் பறவைகளையும்
குறைந்து போக வைத்து
அலை கோபுரங்களை பெருகவிட்ட
அறிவியல்... இயற்க்கை எனும்
கருவறை தின்ற கரு...!

மழலை கொன்று
மனிதம் தின்று
மண்ணை வென்றதாய்
மார்தட்டும் மாக்கள்... மக்கள் எனும்
கருவறை தின்ற கரு....!

உரிமையை நிலைநாட்டும்
ஒரு மை விரலுக்கு
பத்து விரல் நீட்டி
பணம் பெற்றோர்... உரிமை எனும்
கருவறை தின்ற கரு....!

மும்பை தாக்குதல்
முல்லைதீவு கொடூரம்
காஜா படுகொலைகள்
அன்பெனும் உலகம்.... மனிதம் எனும்
கருவரை தின்ற கரு....!

கருவரை தின்னும் கருக்கள் மாறட்டும்
கருப்பையில் நின்று ஒன்று சேரட்டும்
உலகின் உன்னதம் வளர்க்கும்
லட்சிய மகவாய் மாறட்டும்....!
கருப்பை போற்றும்
கவின்மிகு உறவாய் வாழட்டும்...!!