வியர்வை ஒழுகி
நரம்புகள் புடைத்து கிடைக்கும்
ஒருபோகம் விளைச்சலையும்
விலை தேடி அலையும்
விபரம் அறியா மக்களுக்கு
உங்களின் விரல்களின் எண்ணிக்கைதான்
விடுதலைக்காய் பெற்ற நம் சுதந்திரமா..?
உள்ளாடை வெளிதெரிய
உடுத்தும் உடைக்கு கொடுக்கும் சுதந்திரம்
ஒன்றுமே இல்லாத
உழைப்பாளியை நோக்கி - கோவணமென்று
உதாசீணம் செய்வதுதான்
உல்லாசதாரிகள் உங்களது சுதந்திரமா..?
கீழ்மட்டம் மேல்மட்டம் என
குலங்களின் பெயர்சொல்லி
கூத்தடிக்கும் கொடூரர் உங்களுக்கு
கோவிலுக்குள் நுழைவதை தடுக்க
கொடுத்தது யார் சுதந்திரம்..?
வாக்குகள் விற்பனைக்கு என
வர்த்தக பலகை வைத்திருக்கும்
வழிப்பரியர் உங்களிடத்திலா
வாழ்க்கையின் சுதந்திரத்தை தேட...
மலம் தின்ன வைத்து
மனம் கொன்று வாழும்
மனிதர்கள் இவர்களிடத்திலா நம்
மகத்துவமான சுதந்திர கீதம் பாட...
நவீன பாஞ்சாலியாக
நடு சாலையில் துகிலுரிக்க
நாணம் இல்லா மனிதர்கள்
நாற்புறமும் பார்த்திருக்க
நாம் எங்கே போய் தேடுவது
நல்லதொரு சுதந்திரத்தை..?
ஏழ்மை... தாழ்மை...
எல்லாவற்றையும் ஒழிப்போம்
குற்றம்... கொடுமைகளை
குழிதோண்டி புதைப்போம்
பிறகு வாருங்கள்...
எல்லோருமாய் கூடி
இருக்கும் சுதந்திரத்தை
இன்பமயமாய் சுவைப்போம்..!
நன்றி யூத்புல் விகடன்:
http://youthful.vikatan.com/youth/india63/KRamesh15082009.asp
No comments:
Post a Comment