Tuesday, September 18, 2012

இயற்கை சரியில்லை...


நன்றி:எழுத்து இணையம்

பூச்சிகள் புழுக்களின் வீடுகளை
புதைத்து மூடிவிட்டு
புதியதோர் அடுக்கு மாடிக்கு
பூமி பூஜை செய்தோம்...

குருவி காக்கை பறவையினத்தை
குறுக செய்துவிட்டு
அகன்றஅலை நுட்பத்தில்
அகிலத்தை பார்த்தோம்...

கல் என்று சொல்லி மலைகளையும்
கரி என்று சொல்லி பூமியையும்
கண்டபடி வெட்டி எடுத்து
காசும் பார்த்து விட்டோம்...

மரபீணம் எனச் சொல்லி
மண்ணை கெடுத்தோம்
விஞ்ஞாணம் என‌ச் சொல்லி
விண்ணை கெடுத்தோம்...

துளையிட்டு உறிஞ்சி
பூமியை தள்ளிபோக செய்தோம்
புகைவிட்டு நிரப்பி
ஓசோனில் புள்ளி கோலம் வைத்தோம்

மழை இல்லை நிழல் இல்லை என்று
மனம் விட்டு திட்டி கொண்டோம்
எல்லாவற்றையும் நாங்கள் செய்துவிட்டு
இந்த இயற்கை சரியில்லை என்றோம்....!


Thursday, November 24, 2011

ஒரு பயணத்தின் கதை...

அவசர பயண முடிவுகளில்
பெரும்பாலும்
இரயில் பயணம் சாத்தியமில்லை... 

உடல் கிழிக்கா இருக்கை வேண்டும்
உடனே திறக்கும் கண்ணாடியோடு
உலுக்கி எடுகாத பேருந்து‌‌ வேண்டும்...


உணவு தண்ணீர் எடுத்து
உணர்வோடு வைக்க வேண்டும்
இல்லையெனில்
உணவகங்களுக்கு ஒரு நூறு
அழுதாக வேண்டும்...

சிரித்த முகத்துடனே நடத்துனர்

சில்லரை தரவேண்டும்
சேரும் நேரம் கேட்டால்
சீராத ஓட்டுனர் வேண்டும்

ஏழையாய் இருந்தாலும்

இவையோடு சேர்ந்து இப்பொழுது
இருமடங்கு கட்டணமும் வேண்டும்...

அத்தனை இடர்படுகளும்

அர்த்தமற்றதாகி போகின்றன‌
அன்பு நிறைந்த
உறவுகளை பார்க்கும்போது...

மீண்டும் அதே பயணம்

மாறாத அதே அழுத்தங்கள்
இருந்தும் தயாரகிறோம்
அடுத்த பயணத்தை நோக்கி
சொந்த ஊரின் சுகத்தை அனுபவிக்க....!

Friday, November 18, 2011

மக்கள் போ(தூ)ற்றும் அரசு....!



           மக்கள் அரசு என்பது மக்களை அரவணைப்பதாகவும் , அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் மற்றும் முன்னோடியாக போற்றுதலுக்கு உரியதாகவும் இருக்க வேண்டும்.

"நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி,சிவசக்தி!-என்னை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? "
                       -- பாரதியார்

நல்ல ஒரு காரியம் செய்து அதை குப்பையில் போடுவதற்காகவா மனிதனை அறிவுடன் படைக்கப்பட்டான். நல்ல காரியம் செய்யாவிட்டாலும் பரவயில்லை பிறர் செய்த நல்ல காரியங்களை குப்பையில் போடுவது என்பது மிகபெரிய மனித துரோகம். முற்காலத்தில் போரிட்டு நாடுகளை கைப்பற்றும் போது கூட அந்தந்த நாடுகளில் உள்ள அறிவு சார்ந்த விசயங்களை ஒரு பொழுதும் அழிக்க முற்பட்டதில்லை ஆனால் தற்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளை பொறுத்தி பார்க்கும் போது நாம் பெற்ற வளர்ச்சியெல்லாம் ஒன்றுக்கும் உதவ போவதில்லை என்பது மட்டும் திண்ணமாகின்றது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றம் என்ற அறிவிப்பு வாசிக்கும் பழக்கமுடைய அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி. ஒரு நூலகத்திற்கென்றே வடிவமைப்புகளுடன் கட்டபட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக்குவது என்பதும் வீண்செலவான விசயம்.அப்படி மாற்றும் செலவினங்களோடு கூடுதலாக நிதி சேர்த்து புதியதாக ஒரு மருத்துவமனையையே கட்டிவிடலாம் அப்படி இருக்க நூலகத்தை இடமாற்றம் செய்வது என்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. நூலகங்களின் எண்ணிக்கை உயர்வது நிச்சயம் நல்ல விசயம்தான், ஆட்சியாளர்கள் அதனை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என நினைப்பவர்கள் ஏன் ஒரு புதிய நூலகத்தை கட்டகூடாது?. சென்னை இல்லாது மதுரை,திருச்சி மற்றும் கோவை போன்ற நகரங்களில் நூலகத்தை கட்டுங்கள் யார் உங்களை வரவேற்காமல் இருக்க போகிறார்கள்.அதை விடுத்து காழ்ப்புணர்ச்சியில் செய்யும் செயல்கள் நிச்சயம் ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் ந‌ம்பிக்கை தர்மம் கிடையாது மாறான துரோகம்.

கட்டண‌ உயர்வுகள் :

    எந்த ஒரு சாமனிய மனிதனும் ஏற்றுகொள்ள முடியாத அளவு விலை ஏற்றங்கள் நடந்துள்ளது.நாம் அறிந்த வரையில் பெரும்பாண்மையான மக்களை முகம் சுழிக்க வைக்கும் ஒரு காரியம் இது.ஏற்கனவே விலை உயர்வுகளை சந்திக்க முடியாமல் துண்பங்களில் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு இது மேலும் பலத்த அடி.பால் விலை உயர்வு 6 ரூபாய்,பேருந்து கட்டணம் 40 ல் இருந்து 60 சதவிகிதம் உயர்வு எண்பது சதாரண மக்களை நேரடியாக பாதிக்க கூடிய விசயங்கள்.இந்த விலை உயர்வுக்கு எடுத்து சொல்லும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.

1.மத்திய அரசின் நிதி வரவில்லை: இது எப்படி நம்ப தகுந்ததாக இருக்க முடியும்.எல்லா மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டு கொடுக்கதானே மத்திய அரசு இருக்கிறது,மற்ற மாநிலங்கள் இதைபற்றி ஒரு குறையும் சொல்லவே இல்லையே.நீங்கள் உங்களது சுய விளம்பரத்திற்காக கொடுக்கும் இலவசங்களுக்கு நிதிஉதவி கேட்டால் எப்படி மத்திய அரசு கொடுக்கும்,இதை நீங்கள் இலவசங்களை அறிவிப்பதற்க்கு முன்னால் அல்லவா யோசித்திருக்க வேண்டும்.அப்ப‌டியே மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் அதை வாங்கும் முயற்ச்சி செய்யாமல் மக்களின் தலைமேல் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்.

2.ஆவின் மற்றும் போக்குவரத்து கழகங்கள் இழப்பில் இயங்குகிறது:
இந்த கழகங்கள் இழப்பில் இயங்குவதற்கு யார் காரணம்? அவை வெற்றிகரமாக இயங்குவதற்கு என்ன முயற்ச்சிகள் எடுத்தீர்கள்?. காரணத்தை அறியாமல் அந்த சுமையை மக்கள் மேல் ஏன் சுமத்துகிறீர்கள்.இந்த விலை உயர்வினால் அந்த நிறுவனங்கள் நல்ல நிலை அடையுமா? பக்கத்தில் உள்ள கர்னாடகத்தில் நீங்கள் தற்போது உயர்த்திய விலையை விட 30 சதவிகிதம் குறைவு ஆனால் அவர்களின் பராமரிப்பிலும் சேவைசெய்யும் விதத்திலும் மிகவும் தரமானவர்களாக இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது மற்ற மாநிலங்களை கட்டண‌ விசயத்தில் மட்டும் நீங்கள் ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்.கட்டணங்களை உயர்த்திய நீங்கள் வசதிகளை பெருக்குவதற்கும் ஒழுங்காக சேவை செய்வதற்கும் என்ன உத்திரவாதம் தந்திருக்கிறீர்கள்.


                    இழப்பில் இயங்குகிறது என்பதற்காக இரண்டு நிறுவனத்தையும், அலுவலர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கதை சொல்லும் நீங்கள் 15,000 கோடி வருமானம் வரும் மதுபான நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களை ஏன் நிரந்தர பணியாளர்களாக மாற்ற மறுக்கிறீர்கள் ,அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுப்பது ஏன்? 13,000 மக்கள் நல பணியாளர்களை எந்த அடிப்படையில் வெளியேற்றினீர்கள்.இழப்பில் இயங்கும் நிறுவனத்திற்க்காக விலையை உயர்த்தும் நீங்கள்,லாபத்துடன் இயங்கும் நிறுவன ஊழியர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்காமல் கூட வதைப்பது எப்படி சரியானதாகும்.ஏன் இந்த பாகுபாடு செய்கிறீர்கள்,எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தானே பார்த்திருக்க வேண்டும்.பால் கொள்முதல் விலை 2 ரூபாய் அதிகரிப்பு ஆனால் விற்பனை 6 ரூபாய் அதிகரிப்பு.பால் உற்பத்தி செய்யும் மக்களுக்கு எந்த லாபமும் கூடாதாம் ஆனால் மக்கள் மேல் சுமையை ஏற்றி லாபத்தை சம்பாதிக்கலாமாம் இது எந்த வகையில் மக்கள் நலனை சார்ந்ததாக இருக்க முடியும்? .
            சாதாரண , நடுத்தர மக்கள் ஏற்கனவே பல்வேறு வரிச்சுமைகளிலும் நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கையில் மீண்டுமொரு பெரியொதொரு விலையேற்றம் என்பது ஏற்றுகொள்ளவே முடியாது.இனிமேல் தேனீர்,காப்பி என்பதெல்லாம் திருநாளுக்கு செய்யும் பதார்த்தம் போல் ஆனாலும் ஆச்சர்ய படுவதற்க்கு ஒன்றுமில்லை.இரயில் பயணங்களுக்கு கூட்டம் அதிகபடியாக அலைமோதும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. இந்த விலை உயர்வை முன்வைத்து தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்திக்கொள்வது நிச்சயம்,ஆக யோசித்து பார்த்தால் தனியார் நிறுவனக்களின் சதி இங்கு இருக்க கூடும் என்பது பாமரனுக்கும் புரிந்து போய் விடுகின்றது.இதற்கு மேலும் மக்கள் போற்றும் அரசா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவெடுப்பர்.எது எப்படியோ ஓட்டு போட்ட மக்கள் ஏதோ முனுமுனுப்பது தெரிகிறது.ஆனால் என்ன செய்வது இன்னும் 4 ஆண்டு காலம் தலை எழுத்தை மாற்ற முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

Tuesday, September 6, 2011

மழை நாளின் மிச்சம்...!

கை வலிக்குமென்றென்னி
காதலோடு குடையை நான் கேட்க‌
வேண்டாமென முறைத்தாய்
வேண்டும் என்றே என்னை
வெட்க மழையில் நனைத்தாய்....

அவயங்கள் பட்டுவிடுமோ என‌
அதீத‌ எச்ச‌ரிக்கையில்
அச்ச‌த்தோடு நான் ந‌ட‌க்க‌...
நீ
நெருங்கி ந‌ட‌ந்து வ‌ந்து
நெருப்பு சுவாச‌த்தால்
நெஞ்ச‌த்தை குலைத்தாய்....

ம‌ழையின் குளிர்
ம‌ன‌திற்க்குள் இருக்க‌
உடலின் குளிரையெல்லாம்
ஓரக்கண்ணால் விரட்டி அடித்தாய்...

மழைநீரை கையில் ஏந்தி
மாறி மாறி என்மேல் எரிந்து
தண்ணீரை கூட கை வைத்து
பண்ணீராக்கி தந்தாய்....

ச‌ல‌ ச‌ல‌த்த‌ கொலுசு ச‌த்த‌ம்
ச‌ட‌ ச‌ட‌வென்ற‌ ம‌ழை நீரில்
ச‌த்த‌ம் ஓய்ந்த‌துபோல்
ப‌ட‌ ப‌ட‌த்த‌ என் ம‌ன‌தினை
ப‌தை ப‌தைத்த‌ உன் விர‌ல் தொட்டு
யுத்த‌ம் நிறுத்தி கடந்தாய்.....

சத்தமில்லாமல் என்மனதில்
சாகசங்கள் பல‌ புரிந்தாய்  - ஓர்நாள்
சந்தியில்நின்று ஏதுமில்லை எனசொல்லி
சாதுர்யமாய் எனை பிரிந்தாய்...

ஆனால் நான்
கொஞ்சம் நேற்று பொழிந்த‌
கோடை சிறு மழைக்கே
கலையாத‌ உன்நினைவுகளில்
களிப்போடு நனைந்து வந்தேன் - இப்படி
மொத்தமாய் கொட்டிதீர்த்த‌ மழைகளில்
மிச்சமாய் நின்றது எனது காதலும்..
உனைப்பற்றிய எனது கவிதைகளும்தான்...!


வெளிவந்த படைப்பு நன்றி :தமிழ்ஆதர்ஸ்.கொம்

Sunday, September 4, 2011

கலங்கி போன சாமி...

அதிகாலை நான்கு மனிக்கு
அக்னி வளர்த்து யாகம்
காலையில் களைகட்டும்
பொங்கல் விழா
மதியம் கருவாட்டு குழம்பு கூழ் ஊற்றி
மகிழ்ச்சி கொண்டாட்டம்
மாலையில் கரகாட்டம் அதில்
மதி மயங்கும் குத்தாட்டம்
இரவில் தேர்ப்பயண வீதிஉலா என‌
இனிமையாக இருந்தது திருவிழா...

நள்ளிரவு ஆடல் பாடலில்
தலைவன் பாடல் போடவில்லை என்ற‌
தடியடி கலவரத்தில்
தப்பித்து ஓடிய கூட்டத்தைப் போலவே
கருவறைக்குள் நடுங்கியபடி
கலங்கிக் கொண்டிருந்தது
எல்லோரையும் காக்கும் சாமி...!

நன்றி : கீற்று

Thursday, August 25, 2011

நேற்று முளைத்த காளானும்... பழைய பூதங்களும் ...

                 அன்னா ஹாசரே மெற்கொள்ளும் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்க்கு இவ்வளவு ஆதரவை கண்டு உண்மையில் இது இந்தியாதானா எனும் அளவுக்கு ஆச்சர்யம் எழுகின்றது , நாம் சாரசரி வாழ்க்கையில் ஊழல் இல்லாத இடமே இல்லை... பழகிப்போன, கறைபடிந்த, அர்த்தமில்லாத,தேசத்தின் துரோகமான‌ ஊழலை எதிர்ப்பது என்பது சாதாரன விசயமில்லை,அதற்கு பெருகி வரும் ஆதரவுகள் நிச்சயம் பாராட்டக்கூடிய விசயம்தாம்.

                  எல்லாம் சரிதான் இவ்வளவு நாளாய் எங்கே போனாய் என் தேசமே? வேறு எவறுமே போராடவில்லையா? இல்லை போராடியவர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? போராடியவர்களை இந்த ஊடகம் சரியாக உங்களுக்கு அடையாளபடுத்த வில்லையா? இல்லை எல்லோரும் ஆதரவு தருகிறார்கள் நாமும் கலந்து கொள்வோம் என்று சொல்கிறீர்களா? இல்லை மட்டைபந்தில் சொதப்பிய இந்திய அணியை பார்த்த வெறுப்பில் வந்த கூட்டமா, நாளைக்கே இந்தியாவை கடனாளியாக்கி விட்டு இரண்டொரு வெற்றிகளை குவித்து விட்டால் தொலைக்காட்சி முன் அமர்ந்து தவமிருக்க‌ போய்விடுவீர்களா?.
 

        தனியார் முதலாளிகளின் ஊழலுக்கும்,அரசு ஊழியர்களின் ஊழலுக்கும் எதிராய் கிளர்தெழுந்தவர்களை நக்சல்கள் என்று கூறி அடக்குகிறோம்.அவர்களின் போராட்ட பாதை தவறு என ஏற்றுக்கொள்ளும் அதே தருணத்தில், அவர்களின் போராட்ட காரணத்திற்கு என்ன பதில் சொன்னோம். இயற்கை வளங்களை அபகரிக்கும் தனியார் முதலாளிகளை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் ஊழலுக்கு ஆதரவு தரும் அரசையும் நம்மையும் என்னவென்று சொல்வது(இதைதானே அருந்ததி ராயும் வழியுறுத்தி சொல்கிறார்).இதைப்போன்ற பழைய பூதங்களை நம் கண் முன் மறைக்கப்பட்டது ஏன்?.அவற்றை பற்றி அறிந்து கொள்ள கூட முற்படாத‌ நாம் நேற்று கிளம்பிய ஊழல் போராட்டதிற்கு ஆதரவு தருகிறேன் என்று கிளம்புவதும், இதை வைத்து ஆதாயம் தேட விளையும் புல்லுருவிகளை பாராட்டுவதையும் நினைத்தால் நகைச்சுவைதான் வருகின்றது.

        இவ்வளவு ஏன்? அன்னா ஹசாரே போராட்டம் நடத்தும் இதே நேரத்தில் இன்னொரு முக்கிய போராட்டமும் நடைபெறுகின்றது அதுவும் பாராளுமன்ற வாசலிலேயே நடக்கிறது, அதுவும் நம் வாழ்க்கை சம்பந்தபட்ட ஒன்றுதான் எத்தனை பேருக்கு அந்த போராட்டம் தெரியும்? எத்தனை பேர் அதற்கு ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்? அதுவும் இன்றியமையாத உணவு பொருள் மரபனு கலப்பினத்திற்கு எதிராக‌ பசுமைபுரட்சி(கிரீன்பீஸ்) அமைப்பினர் செய்யும் ஆர்பாட்டம். இந்த "இந்திய உயிரி‍தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்" மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதை அனுமதித்தால், வளரும் சந்ததிக்கு நம் கையினாலேயெ பூச்சிக்கொள்ளியை உணவு என்னும் பெயரில் கொடுக்க நேரிடலாம், மேலும் மரபனு பற்றி தவறாக மக்களிடத்தில் சொன்னாலே சிறை தண்டனையாம். என்ன ஒரு கொடுமை , தனியார் மயவாதிகளும் ,அரசியல் வாதிகளும் இணைந்து செயல்படுத்த போகும் இப்படி பட்ட‌ ஒரு மசோதாவும்தான் இருக்கிறது.இதை பற்றி என்ன சொல்ல போகிறோம்? இதற்கு ஏன் மக்கள் யாரும் திரளவில்லை?


            ஊழல் எதிர்ப்பு முறையாக அமல்படுத்தப்பட்டு நல்ல காரியங்கள் நடக்கும் என்றால் அது நல்லது.இந்த போராட்டம் "லொக்பால்" வரம்புக்குள் பிரதமரும் வரவேண்டும் என்றும் உடனே அமல்படுத்த வேண்டும் என்று தொடர்கிறது.அப்படி நடைமுறைபடுத்திய பின் எல்லாம் சரியாக நடக்குமா? அதற்கு என்ன உத்திரவாதம் தரமுடியும்.இதை ஆதரிக்கும் எதிர்கட்சிகளும் நாளை ஆட்சிக்கு வந்தால் மாறக்கூடும்,இன்னும் சொல்லப் போனால் எதிர்கட்சிகளின் அரசியலுக்கு அன்னா பலியகிறாரோ என்ற எண்ணம் கூட வருகின்றது.இன்று ஊழலுக்கு எதிராக கொடி பிடிக்கும் நாம் சாதீயம் குறித்தோ, ஏழ்மை நிலைக்கு எதிராகவோ போராடும் போது அவரவர் வேலை பார்த்து கொண்டுதானே செல்கிறோம்.சுதந்திரம் வாங்கியதில் இருந்து துயரப்படும் அடித்தட்டு மக்களுக்கு எவரும் போராட முன் வருவதில்லையே அல்லது அப்படி வருவோரை மட்டம் தட்டுவதிலேதானே நாம் காலத்தை கழித்திருக்கிறோம். இது குறித்து எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? இல்லை சிலர் போல் "அதற்கெல்லாம் போராட ஆள் இருக்கிறார்கள்" என்று சொல்ல வருகிறோமா? இல்லை "நான் செய்யலாம் என்று இருந்தேன் அவர்கள் செய்கிறார்கள்,நான் எப்படி அவர்களுக்கு ஆதரவு தரமுடியும்" என்று சொல்ல வருகிறோமா? (இப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்று ஊழல் எதிப்பு போருக்கு ஆதரவு தருகிறார்களாம்!?). இவையெல்லாம் மாறி என்று நாம் ஒரே சிந்தனையில் உருப்பெற போகிறோம்? தமிழர்கள் நாம் ஒன்றினைந்து நினைத்திருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏன் உலகையும் கூட இலங்கை விசயத்தை புரிதல் செய்திருக்க முடியும் ஆனால் நம் போராட்ட களங்களை தனியாக பிரித்து, நமக்குள் தனிதனியாய் பிரிந்து நம் சொந்தங்களை இழந்து பழி சொல்லுக்கு இன்று ஆளாகி இருக்கிறோம். இவையெல்லாம் நம் கண்ணில் தெரியாமல் மறைத்த‌ புண்ணியத்தை யார் செய்தது? அப்போதெல்லாம் எங்கே போயிருந்தது இத்தனை பெரும் இந்தியா?  
    
                                           ஊழல் விசயத்தில் நான் கொடுக்கமாட்டேன், வாங்கமாட்டேன் என்ற இரண்டு விதிகள்தான் ஆனால் சராசரி பதில் என்ன வரும்?, "நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் ஆகாது".இந்த பதில் எல்லாம் அர்த்தமில்லாத ஒன்று,சாத்தியம் என்று வருகிறதோ அன்று சிறிய அளவிலும் சரி,பெரிய அளவிலும் சரி ஊழல் இருக்காது.இதே அரசு "லோக்பால்" மசோதா நிறைவேற்றினாலும் ஊழலை மறைக்க முடியாது காரணம் மனிதர்களிடம் பணம் சேர்க்கும் ஆசையும்,வெறியும் புரையோடிபோய் கிடக்கின்றது.நேர்வழியில் சம்பாதிக்க எவரும் விரும்பாத நிலை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.நாம் அரசியல்வாதிகளையும்,அரசு அலுவலர்களையும்,தனியார் முதலாளிகளையும் குறைசொல்லி ஒன்றும் பயனில்லை, நாமும் மாறவேண்டும் அதுதான் ஊழலை ஒழிக்க நிரந்தர வழி.ஒவ்வொரு மனிதனும் மனிதனாய்,இந்தியனாய் நினைத்தால் அது முடியும். போராட்டம் என்பது மனித‌ சக்தியை திரட்டும் பெரும் யுக்தி, யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக உங்களை இணைத்துக் கொள்ளாமல் சுயமாக சிந்தனை செய்து போராடுங்கள்.நேர்மையான நல்ல காரியங்கள் நடக்கவேண்டும் என்பதற்காய் போராடுங்கள். மனிதன் மனிதனாய் வாழ்வதற்கு போராடுங்கள்.

        இந்தியா நிறைய இடங்களில் முன்னேற வேண்டியதிருக்கிறது சாதீயம்,மதம்,ஏழ்மை,தீவிரவாதம்,ஊழல் மற்றும் இன்னும் பற்பல.இவை எல்லாம் முற்றிலும் மாற வேண்டுமானால் மனிதர்கள் நாம் மாறவேண்டும் அதுதான் இந்தியா ஒளிர்வதற்க்கு விளக்காகுமே தவிற இது போன்று ஒருவர் பின்னே ஓடிவரும் செம்மறி ஆடுகளாய் இருப்பது நமக்கு அவசியமே இல்லாத ஒன்று.எதற்காக போராடுகிறோம் என்று அறிந்து பின்தொடர்வோம், போராடுவோம். ஒவ்வொரு இந்தியனும் நினைத்தால் சாதீயம், மதம்,ஏழ்மை, தீவிரவாதம், ஊழல் எதுவுமே இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.ஆம் நாம் நினைத்தால்தான் அது முடியும்.
       

Monday, August 8, 2011

காதல் பக்கம் ‍ - 1